பக்கம் எண் :

440

எழுகொழுந் தழலில் வீழ்ந்து மிறுதிகாண் கிலரா யேங்கிக்
கழிபெருங் கூச்ச லிட்டுக் கதறியு மாக்கை தீக்குள்
முழுகியு மாவி நைந்து முறையிட்டு மாற்ற மாட்டா
தழுகுர லோசை மல்கி யலறுபே ரொலியுங் கேட்டார்.

72
 
அவ்வயி னின்று நீங்கி யாரிய ரறவோ ராய
செவ்வியீர் யாங்கள் கண்ட திறம்வகுத் துரைமி னென்னாக்
கைவரு வஞ்ச நெஞ்சுக் கள்ளஞா னியர்வி ரைந்து
வெவ்வழ னிரைய மெய்த விதித்ததிக் குறுக்குப் பாதை.
73
 
பன்னெடு நாளா ஜீவ பாதையைப் பிடித்து வந்துந்
துன்னிய நாச மோசஞ் சோதனை யிடுக்கண் டுய்த்தும்
இந்நெடு வரைட் டாக வெட்டியு மிகலுக் கொல்கிப்
பின்னிடை பவரே யிந்தப் பிலந்தலைப் படுவர் மாதோ.
74
 
இப்பிலத் துவாரத் தன்றே முதற்பிறப் பிகழ்ந்த வேழை
விப்பிர யஜமான் றன்னை விற்றசா மித்து ரோகி
துப்புறழ் சுவிசே ஷத்தைத் தூஷணஞ் செய்த பாவி
கைப்பொருள் வெஃகிப் பொய்த்த காதகர் கவிழ்ந்தார் முன்னம்.
75
 
கனைகுரற் பிலத்து வாரங் கள்ளஞா னியர தென்னா
இனையன விளம்பக் கேட்ட மறைவலா னிதுமுன் கேட்டேந்
துனையிருட் பிழம்பு காட்டிச் சொற்றநும் முரைகொண் டின்னே
தினையள வைய மின்றித் தெளிந்த மென்று செப்பும்.
76
 
நெறியலா நெறியிற் செல்லு நீர்மையு மடமை யன்றாம்
அறிவன வறிய கில்லா வனந்தரு மடமை யன்றாம்
பிறிதெவன் கற்றுங் கேட்டும் பேறறி வுடைய ராகிப்
பொறிவழி யுள்ளம் போக்கும் புன்மையே மடமை யாமால்.
77
 
மானிட வாக்கை பெற்றும் மறைநெறி புக்கும் நேர்ந்த
ஈனதை நிந்தை துன்ப மினையன சகித்துந் தேவ
கோனருள் பெற்றா னந்தக் குவடுகண் டடைந்து மந்தோ
மேனிலை வழுவி வீழின் மீட்புண்டோ பாவம் பாவம்.
78
 
போக்குண்டு துன்புக் கெல்லாம் புகலுண்டு விபத்துக் கெம்மான்
வாக்குண்டு நமக்குக் கூட வருந்துணை யுண்டு கெஞ்ச
நாக்குண்டு வீடு கூடு நம்பிக்கை யுண்டு நல்லீர்
மீக்கொண்டு நுங்க ளாசி விடைகொண்டு சேறு மென்றார்.
79