பக்கம் எண் :

46

   

மேலைநா ளிளவர சுயர்த்த வெல்கொடிக்
கோலினின் றுலகர்க்குக் குருதிச் சான்றுரை
ஞாலமீத் திகழ்த்திய நலங்கொ ளுஞ்ஜெய
சீலசங் கத்தொனி திகந்த முட்டுமே. 59

     (பொ - ரை) முன்னாள் அரசிளங்குமரனால் உயர்த்தப்பட்ட
ஜெயக் கொடி ஸ்தம்பத்தினின்று, உலகினர்க்கு எம்பெருமான் சிந்திய
இரத்தமாகிய சாட்சியை விளக்கிய நன்மைபொருந்திய வெற்றியைக்
குறிக்கும் பரிசுத்த சங்க நாதமானது திக்குகளின் அந்தத்தையும் சென்று
சேரும்.

 
   

           வேறு

துன்பம் யாதுமின் றாகத் தூய்தவர்
பொன்பொ லிந்தவப் புரவ லன்கழற்
கன்பு செய்துசெய் தழிவி லாதபேர்
இன்ப மெய்திவாழ்ந் திருப்ப ரென்றுமே. 60

     (பொ - ரை) பரிசுத்தமான தவத்தினையுடையோர் துன்பம்
யாதுமின்றி அழகு மிகுந்த அப்பரலோக ராஜனுடைய திருவடிக்கு
அன்பையே செய்து செய்து எப்பொழுதும் நித்திய பேரின்பமுற்று
வாழ்ந்திருப்பர்.

 
   

பகலி ராவெனும் பகலி லாதவப்
புகரில் வானநாட் டரசன் பொற்புறு
மகிமை யொண்கதிர் வனையு மாடையா
நகர வாணர்க்கு நலம்ப யக்குமே. 61

     (பொ - ரை) இஃது இரவு, இஃது பகல் என்னும் பாகுபாடில்லாத
.குற்றமற்ற வானலோகத்தரசனது அழகுபொருந்திய மகிமையின் பிரகாசம்
பொருந்திய கிரணங்களே நகரவாசிகளுக்கு அணியும் ஆடையாக
நலத்தை யுண்டாக்கும்.

 
   

முத்தி மாநகர் முழுதுந் தம்பிரான்
சித்தம் யாதது செய்து நிற்பதே
நித்தி யானந்த நிகரில் வாழ்வெனாப்
பத்தி செய்யுமாற் பரம சிந்தையாய். 62

     (பொ - ரை) அம்முத்திமா நகரத்தார் யாவரும் தம்பிரானுடைய
சித்தம் எதுவோ அதனைச் செய்துவாழ்தலே ஒப்பற்ற நித்தியானந்த
வாழ்வு என்று பரம சிந்தையோடும் பக்திசெய்வர்.