பக்கம் எண் :

65

    பண்ணவர் குழுமிய பரம ராஜ்ஜியம்
கண்ணிய பெருவளங் கைக்குள் ளாயதால்
எண்ணமென் னிடர்க்கடல் வளாகத் தேக்குறும்
மண்ணுளீர் தாழ்ப்பதென் மனந்தி ரும்புமின். 45
 
  வித்தகந் தயைபொறை விநயந் தண்ணளி
சத்தியம் புனிதமெய்த் தருமம் பத்தியென்
றித்தகு சீலர்நட் பினிதி னாற்றிநீர்
உத்தம வழித்துணை யாக்கொண் டோடுமின். 46
 
  ஆவியி லெளியவ ரடைவர் வான்கதி
மேவருந் துயருறின் மேவு மாறுதல்
தாவருஞ் சாந்தருக் குலகந் தம்வசம்
ஈவிரக் கம்முளார்க் கிரக்கங் கிட்டுமால். 47
 
  நீதியைப் பசித்தவர் நிறையத் தேக்குவர்
ஏதமில் தூயர்கண் டடைவ ரீசனை
பேதமற் றைக்கியம் பிறங்கச் செய்குநர்
காதலர் கடவுள்வேந் தருக்குக் காண்மினோ. 48
 
  நீக்கமி னீதியி னிமித்தந் துன்புறில்
மேக்குயர் வானநாட் டின்ப மேவுவார்
மீக்கிளந் தவரெலாம் விபுத நாட்டுள
பாக்கிய மடைந்துயும் பவித்தி ரான்மிகள். 49
 
 

             வேறு

அம்ப ராதிப னும்பிதா வவரரு ணன்மை
இம்பர் நல்லர்பொல் லாருக்கு மியைவன கண்டீர்
தம்பி ரானென நீயிருஞ் சற்குணந் தழுவி
வெம்பு தீமைக்கு நன்மையே விருப்பொடு விளைமின். 50

 
  ஈர நீருல கத்தினுக் குப்பென வியைவீர்
சோர விட்டிடா துலகரைத் தூயநல் லொழுக்கால்
சார மேற்றுமி னன்றெனிற் றள்ளுண்டு மிதிபட்
டாரும் வையகத் தவமதிப் படைவிரீ தறிமின். 51
 
  உலகி னுக்கொளி நீயிரும் முத்தம கிரியை
இலகு மென்னிலங் கவரகத் திருளிரிந் தோடும்
விலகி வில்லிடு மொளியையுள் ளடக்கிமேன் மூடில
அலக றுஞ்சுட ராற்பயன் பிறிதுள வாங்கொல். 52