பக்கம் எண் :

சீறாப்புராணம்

1102


இரண்டாம் பாகம்
 

2972. ஈனன பாசுபி யானு மின்பமு

     மானமுந் தவிரபூ சகுலும் வன்கொலைக்

     கானபஞ் சரசபு வானு மாண்டொரு

     தானமீ தமர்ந்துநின் றவர்கள் சாற்றுவார்.

8

      (இ-ள்) அவ்வாறு நிற்க, இழிவை யுடையவனான அபா சுபியா னென்பவனும் இன்பத்தையும் அபிமானத்தையும் தவிர்த்த அபூஜகி லென்பவனும் கொடிய கொலைத் தொழிலுக்கான தேகத்தைக் கொண்ட சபுவா னென்பவனும் அங்கு ஒரு தலத்தின்

கண் தங்கி நின்று கொண்டு அவர்கள் சொல்லுவார்கள்.

 

2973. கானகச் சுணங்கன்வாய் கழிந்து போனதிம்

    மானென விருந்தன மானு மொல்லையி

    னானநல் ஹறமது ளாய தாலது

    தானுநல் லறமதைச் சங்கை செய்ததே.

9

      (இ-ள்) இந்த மானானது காட்டி னிடத் துள்ள இவ் வோநாயின் வாயிலகப்பட்டு இறந்து போயிற் றென்று நா மெண்ணி யிருந்தோம். அந்த மானும் விரைவில் இவ் வுலகத்திற் சமைந்த நன்மை பொருந்திய ஹறத்தி னகம் போய்ச் சார்ந்தது. அவ் வோநாயும் நன்மை பொருந்திய அந்த ஹறத்தைக் கனம் பண்ணிற்று.

 

2974. வருந்திட நிதமுயிர் செகுக்கும் வன்சுணங்

     கருந்திடும் பசிவெறுத் தறமைச் சங்கைசெய்

     திருந்தது மானுமிவ் வெல்லை யுட்படப்

     பொருந்திநின் றகம்புறம் போய தில்லையால்.

10

      (இ-ள்) அன்றியும், பிரதி தினமும் துன்ப முறும் வண்ணம் ஜீவராசிகளைக் கொல்லா நிற்கும் கொடிய இந்த ஓநாயானது தானுண்ணும் பசியை மறுத்து ஹறத்தைக் கனம் பண்ணி அங்கு தங்கிற்று. அந்த மானும் இந்த ஹறமென்று கூறும் தானத்தினுட்படவே, அத்தானத்தை மனதின் கண் பொருத்த முற்று நின்று அகத்திலேனும் வெளியிலேனும் போகவில்லை.

 

2975. புதுமையிற் புதுமையீ தென்னப் பொங்கிநின்

     றதிசயத் தொடுமவ ரவர்கள் கூறலும்

     பிதிர்விர றுயர்ந்தபற் பிளந்த வாயினீர்

     குதிதரு நெடியநா நீட்டிக் கூறுமால்.

11

      (இ-ள்) இச் சமாச்சாரங்கள் ஆச்சரியத்திலும் ஆச்சரியமென்று அந்த மூன்று பேர்களும் பொங்கிக் கிளர்ந்து நின்று ஆச்சரியத்தோடு பேசிய மாத்திரத்தில், பிதிர்ந்த விரல்களையும் ஓங்கிய பற்களையுமுடைய அந்த ஓநாய் பிளந்த தனது வாயின் நீரானது சிந்துகின்ற நீண்ட நாவை நீட்டிச் சொல்லா நிற்கும்.