பக்கம் எண் :

சீறாப்புராணம்

1104


இரண்டாம் பாகம்
 

2980. ஆதிதன் னொளிவினிற் றரித்த னாதிதன்

     றூதென வுலகினிற் றோன்றி நின்றனர்

     வேதமு மிறங்கின மெய்மை வேதத்தி

     னீதமு நடத்தினர் நிகரு மில்லையால்.

16

      (இ-ள்) யாவற்றிற்கும் முதன்மைய னான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் ஒளிவிலிருந்து அநாதியான அவ்வல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் றசூ லென்று இவ் வுலகத்தின் கண் வெளியாகி நின்றார்கள். அவர்களுக்குப் புறுக்கானுல் அலீமென்னும் வேதமுமிறங்கிற்று. சத்தியத்தை யுடைய அந்த வேதத்தினது நியாயத்தையும் இங்கு நடத்தினார்கள். அவர்களுக்கு ஒப்பானவர்கள் ஒருவருமில்லர்.

 

2981. அந்நபி நன்மறை யறைந்தீ மான்கொளச்

     சொன்னவை யனைத்தையு மறுத்துச் சூழ்தர

     வின்னலைப் பொருந்தினீ ரீத லாலினிப்

     பன்னரும் புதுமையொன் றில்லைப் பாரினே.

17

      (இ-ள்) அந்த நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் நன்மை பொருந்திய புறுக்கானுல் மஜீ தென்னும் வேத வசனத்தை யோதி ஈமான் கொள்ளுவதற்கு அவர்கள் கூறியவைக ளெல்லாவற்றையும் மறுதலித்து நீங்கள் சூழத் துன்பத்தைப் பொருந்தினீர்கள். இஃதல்லாமல் இனிச் சொல்லுவதற் கருமையான ஆச்சரிய மானது இவ்வுலகத்தின்கண் ஒன்றுமில்லை.

 

2982. முகமது நபியுரை மறுத்த மாற்றலர்

     முகமதி நோக்குதன் முழுதுந் தின்மையென்

     றகலுறக் கொடுமொழி யெடுத்துக் காட்டிவிண்

     புகுமலைக் கானினிற் சுணங்கன் புக்கதால்.

18

      (இ-ள்) அன்றியும், அந்த வோநாயானது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகமது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் வார்த்தைகளை மறுதலித்த சத்துராதிக ளாகிய அக்காபிர்களின் வதன மான சந்திரனைப் பார்ப்பது முற்றும் கேடென்று சொல்லிப் பகைமையானது பொருந்தும் வண்ணம் கொடிய வார்த்தைகளை எடுத்து அவர்களுக்குச் சொல்லிக் காட்டி ஆகாயத்தைப் போய்த் தொடாநிற்கும் மலைகளையுடைய காட்டினிடத்துப் போய்ச் சேர்ந்தது.

 

2983. இணங்கிய நன்மொழி யெவர்க்குங் கூறியச்

     சுணங்கன்வெங் கான்புகச் சூழ்ந்து நின்றிடுங் 

     கணங்களி லபூசகல் கபடுங் கள்ளமும்

     பிணங்கிய மனத்தின் னகைத்துப் பேசுவான்.

19