பக்கம் எண் :

சீறாப்புராணம்

1105


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அந்த ஓநாயானது அவ்வாறு இணக்க மாகிய நல்ல வார்த்தைகளை யாவருக்குஞ் சொல்லி வெவ்விய காட்டின் கண் போய்ச் சேர, அஃதை அங்கு வளைந்து நிற்கும் கூட்டங்களில் அபூஜகி லென்பவன் வஞ்சகமும் சத்தியமும் மாறு கொண்ட மனதினிடத்தில் நிந்தித்துச் சொல்லுவான்.

 

2984. உடும்பைவன் பிணையினைத் தன்கைக் குட்பட

     விடும்பினைப் பயிற்றிய முகம்ம தென்பவன்

     கடம்படு ஞமலியின் கருத்துப் பேதுறப்

     படும்படிப் பயிற்றுதற் பகர வேண்டுமோ.

20

      (இ-ள்) உடும்பையும் வலிமையைக் கொண்ட பெண் மானையும் தனது கரத்தி னுட்படத் துன்பத்தைச் செய்த அந்த முகம்ம தென்னும் அபிதானத்தை யுடையவன் காட்டின்கண்னுண்டான இந்த ஓநாயின் சிந்தையை மிகவும் மயக்கப்படும் வண்ணம் செய்ததை யான் சொல்லவும் வேண்டுமா? வேண்டாம்.

 

2985. அறத்தினுட் படுநகர் மாந்தர்க் கன்பிலா

     திறத்தலைப் படுநினை வெடுத்த வஞ்சத்தான்

     புறத்தொரு நகரிடைப் புகுந்து மாயங்கண்

     மறுத்திலன் விளைத்தனன் முகம்ம தாங்கொலோ.

21

      (இ-ள்) அன்றியும் அந்த முகம்ம தென்பவன் புண்ணியத்தினுட்பட்ட இந்தத் திரு மக்கமா நகரத்தையுடைய ஜனங்களுக்கு அன்பில்லாது இறத்தலைக் கொண்ட கெட்ட எண்ணத்தைத் தாங்கிய மாயத்தினால் வெளியில் ஒப்பற்ற திரு மதீனமா நகரத்தின் கண் போய்ச் சேர்ந்ததும் அவன் செய்கின்ற வஞ்சகங்களை வெறுக்காது செய்தனன்.

 

2986. அயனகர்ப் புகுந்தன னகும தென்றியாம்

     பயமற விருப்பது பழுது பற்றலார்க்

     கியலுறு மிடங்கொடுத் திருத்தல் பாரிடை

     வியனுறும் வீரத்தின் விழும மன்றரோ.

22

      (இ-ள்) அன்றியும், அஹ்ம தென்னும் பெயரை யுடைய அந்த முகம்ம தென்பவன் வேறு நகரத்தின் கண் போய்ச் சேர்ந்தானென்று நாம் அச்சமின்றி யுறைவது குற்றமாகும். இவ்வுலகத்தினிடத்துச் சத்துராதிகளுக்கு இயல்பைச் சேர்ந்த இடத்தைக் கொடுத்துறைவது பெருமை பொருந்திய வீரத்தினது சிறப்பல்ல.

 

2987. மருவலர் வலிகெட வுடைந்து மற்றொரு

     பெருநக ரிருந்தன ராயிற் பேதுறப்

     பரநகர் வேந்தராற் பகைகண் மூட்டியுங்

     கருவறுத் தவர்பகை களைய வேண்டுமால்.

23