|
இரண்டாம் பாகம்
(இ-ள்) அன்றியும், சந்திரனானது
சுற்றித் திரியா நிற்கும் வட்ட வடிவையுடைய இளஞ்சூரியனை யொத்த சுவடாகிய இரு பாதங்களினது சிவப்புக்கு
நான் ஒப்பாகப் பெற்றேன். மடந்தையாகிய அந்தப் பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களின் முகத்தினது
அழகைப் போலும் பெற்றே னல்லேனென் றிருந்து மனமானது நடுங்கும் வண்ணம் வளைந்து ஆகாயத்தின்கண்
சஞ்சரித்து வெட்கி மற்றுமுள்ள கிரணங்களும் குறையப் பெற்றுப் பிரதி தினமும் மறுகா நிற்கும்.
3047.
எண்ணருந் தவமுங் கற்பும்
புகழுநின் றிறைஞ்சி யேத்தும்
பண்ணரும் வேத வாய்மைப்
படிதவ றாத வாக்கு
நண்ணருந் தரும மியாவுஞ்
சொற்படி நடக்கு நாளுங்
கண்ணகன் புவியிற் பாவைக்
கற்பெனு மரசுக் கன்றே.
7
(இ-ள்) அன்றியும்,
இடமகன்ற இப்பூமியினிடத்துப் பெண்களின் கற்பென்று சொல்லுகின்ற அரசாகிய அந்தப் பாத்திமா
றலி யல்லாகு அன்ஹா அவர்கட்குப் பிரதி தினமும் கணக்கற்ற தவமும் கற்பும் கீர்த்தியும் நின்று
பணிந்து துதிக்கின்ற கீதத்தைக் கொண்ட அருமையான வேத வசனங்களின் வண்ணம் தவறாத வார்த்தைகளும்
கிட்டுதற்கரிய புண்ணியங்களு மான யாவும் அவர்களின் சொல்லினது பிரகாரம் நடக்கா நிற்கும்.
3048.
சேணுல கிமையா நாட்டத் தெரிவையர்
தமக்கு மிம்பர்ப்
பூண்முலை யவர்க்கு மேகநாயகி
யென்னப் பூவிற்
காணுதற் கரியோன் செய்தா
னென்னிலிக் கவின்கொண் டோங்கு
மாணிழை மடந்தைக்குற்ற பெற்றியார்
வகுக்க வல்லார்.
8
(இ-ள்) அன்றியும், காணுதற்
கருமையனான ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவானவன் தேவ லோகத்தி னிடத்துள்ள மூடி விழியாத கண்களையுடைய
அரம்பையர்க ளாகிய கூறுல் ஹீன்களுக்கும் இப்பூமியின் கண்ணுள்ள ஆபரணங்களைத் தாங்கிய தனத்தை
யுடைய பெண்களுக்கும் ஒப்பற்ற நாயகியாரென்று இவ்வுலகத்தின் கண் சிருட்டித்தா னென்றால் இவ்வழகைக்
கொண்டு ஓங்கா நிற்கும் மாட்சிமை தங்கிய ஆபரணங்களை யுடைய மடந்தையாகிய அப் பாத்திமா றலி
யல்லாகு அன்ஹா அவர்களுக்குப் பொருந்திய பெற்றியை வகுத்துச் சொல்லுவார் யாவர்? ஒருவருமில்லர்.
3049.
எல்லையி லழகு வாய்த்த வேந்திழை
கதீசா வீன்ற
நல்லியற் கனக நாட்டி னாரியர்
திலத மன்னார்க்
கல்லடர் கரிய வாட்க ணகத்திடை
வரிக ளோடிப்
பல்லவம் பசப்புற் றென்னப
பருவம்வந் திறுத்த தன்றே.
9
|