பக்கம் எண் :

சீறாப்புராணம்

1126


இரண்டாம் பாகம்
 

3052. தரியலர்ச் செகுக்கும் வெள்வேற் சதுமறைத் தலைவ ரீன்ற

     வரிவிழிக் கரிய கூந்தன் மங்கைதம் வதுவை வேட்டுப்

     புரிமுறுக் கவிழுந் தொங்கற் புயவரை யரசர் கூடி

     யொருவருக் கொருவ ருள்ளிட் டுரைவெளிப் படுத்துவாரும்.

12

      (இ-ள்) சத்துராதிக ளாகிய காபிர்களைக் கொல்லுகின்ற வெள்ளிய வேலாயுதத்தை யுடைய தௌறாத்து, இஞ்சீல், சபூர், புறுக்கானென்னும் நான்கு வேதங்களுக்குந் தலைவரான நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் பெற்ற இரேகைகள் பொருந்திய கண்களையும் கரு நிறத்தைக் கொண்ட கூந்தலையு முடைய மங்கை யாகிய காத்தூனே ஜன்னத் பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களின் விவாகத்தை விரும்பிப் புரியைக் கொண்ட முறுக்கானது அவிழா நிற்கும் பூ மாலையையணிந்த தோள்களாகிய மலைகளை யுடைய அரசர்கள் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் உட்பட்டுத் தங்களின் மன வெண்ணத்தினது வார்த்தைகளைப் புறத்திற் கூறுவாரும்.

 

3053. வடிவமு மொழுங்கு நீதி வணக்கமு மறிவும் பூத்த

     கொடிமட மயிலைச் சோதிக் குலக்கொழுந்தனைய கற்பைப்

     பிடிபடு மணத்திற் சேர்ந்து பேருல கனைத்தும் வாழ்த்தப்

     படுமவ ரெவரோ வென்னப் பற்பல் காற் பகரு வாரும்.

13

      (இ-ள்) அழகும் நல்ல நடையும் நியாயமும் தொழுகையும் ஞானமும் மலரப் பெற்ற கொடி போலும் இளம் பருவத்தையுடைய மயிலானவர்களை, பிரகாசத்தைக் கொண்ட குலத்துக்கு முதலா யிருக்கும் அரிய பிள்ளையை நிகர்த்த கற்பான அந்தப் பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களை, அகப்படுகின்ற விவாகத்திற் பொருந்திப் பெரிய எல்லா லோகங்களுந் துதிக்கப்படுகின்ற அவர் யாவரோ? என்று பற்பல தடவை சொல்லுவாரும்.

 

3054. பிறநக ரரசர் செவ்விப் பெண்கனி வதுவை வேண்டி

     யறைதிரைப் பரவை யாடை யம்புவி முழுதுங் காத்து

     முறைசெயுங் காரணீகர் திருமுன மொழிமி னென்றென்

     றுறவின ரிடத்திற் றீட்டு மோலைக ளனுப்பு வாரும்.

14

      (இ-ள்) அன்னிய நகரங்களி லுள்ள இராஜர்கள் அழகிய பெண்களில் கனியாகிய அந்தப் பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களின் விவாகத்தை விரும்பிச் சத்தியா நிற்கும் அலைகளைக் கொண்ட சமுத்திரத்தை ஆடையாக வுடைய அழகிய இந்தப் பூலோக முழுவதையுங் காவல் செய்து ஒழுங்குகளை யியற்றுகின்ற காரணீகத்தை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது