பக்கம் எண் :

சீறாப்புராணம்

1133


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அரியவ னான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவினது தெய்வீகந் தங்கிய சத்தியத்தை யுடைய றசூலானவர்களே! பெருமையிற் சிறந்த நபிகட் பெருமானே! யாவற்றிற்கு மிறைவனாகிய ஹக்கு சுபுகானகு வத்த ஆலா வானவன் பிரகாசத்தையும் மேன்மையையுங் கொண்ட இரத்தினங்களினது கூட்டங்களினாலும் புஷ்பங்களினாலும் செழிய வஸ்திரங்களி னாலும் செந்நிறத்தைப் பெற்ற பொன்னினாற் செய்யப்பட்ட அழகிய சொர்க்க லோகத்தினது வீடுக ளெல்லாவற்றிலும் அலங்கரிக்கும்படி கட்டளை யிட்டான். சொல்லிய அந்தக் கட்டளையின் பிரகாரமே தேவர்களாகிய மலாயிக்கத்து மார்கள் அந்தச் சொர்க்க லோகத்தின் கண் விளக்கஞ் செய்தார்கள்.

 

3072. பொன்னகர் விளக்கிப் பின்னர் புகழ்தர மகரு நாட்டி

     யென்னுட னிசுறா பீல்மீக் காயிலுஞ் சாட்சி யேயப்

     பன்னரு மலியார்க் கின்பப் பாத்திமா தமைநிக் காகு

     முன்னிய தருத்தூ பாவின் முடித்தன னிறைவ னன்றே.

32

      (இ-ள்) யாவற்றிற்கும் இறைவ னான அல்லாகு சுபுகானகு வத்த ஆலா வானவன் அவ்வாறு சொர்க்க லோகத்தை விளக்கஞ் செய்விப்பித்துப் பிறகு கீர்த்தி யுண்டாகும் வண்ணம் மகரும் ஸ்தாபித்து என்னோடு இசுறாபீல் அலைகிஸ்ஸலா மவர்களும் மீக்காயீல் அலைகிஸ்ஸலா மவர்களும் சாட்சியாகப் பொருந்தும் படிச் சொல்லுதற் கருமையான அலிறலி யல்லாகு அன்கு அவர்களுக்கு இன்பத்தை யுடைய பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களை நெருங்கிய தூபாவென்னும் மரத்தினது அடியில் வைத்து நிக்கா கென்னும் விவாகத்தை நிறை வேற்றினான்.

 

3073. இந்தநன் மொழியை நும்பா லியம்பென விறைவ னேவ

     வந்தன னென்னப் போற்றி வானவர்க் கரசர் கூறச்

     சந்தன கதம்ப மாறாத் தடவரைப் புயங்கள் விம்மக்

     கந்தடு களிற்றின் மீறி முகம்மது களிப்புற் றாரால்.

33

      (இ-ள்) தேவர்களாகிய மலாயிக்கத்து மார்களுக்கு அதிபதியான ஜிபுரீ லலைகிஸ்ஸலா மவர்கள் யாவற்றிற்கும் இறைவனாகிய அல்லாகு சுபுகானகு வத்த ஆலா வானவன் நன்மை பொருந்திய இந்த வார்த்தைகளை உங்களிடத்தில் சொல்லு மென்று ஆக்கியாபிக்க, யான் இங்கு வந்தே னென்று துதித்துச் சொல்ல, நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தங்களின் சந்தனக் குழம்பும் வாசனைப் பொடிகளும் நீங்காத பெரிய மலைகளை யொத்த தோள்க ளானவை பருக்கும் வண்ணம் கட்டுத் தறியை அடரா நிற்கும் யானையைப் போலும் மீறிச் சந்தோஷ மடைந்தார்கள்.