பக்கம் எண் :

சீறாப்புராணம்

1137


இரண்டாம் பாகம்
 

மென்று அதிகப் பெருமையை யுடைய புளக மானது உண்டாகப் பெற்றன.

 

3082. திருத்திய கனகப் பைம்பூண் சேயிழை வதுவை வேட்டு

     வருத்தமுற் றுணர்வு போக்கி நாடொறும் வருந்து நெஞ்சிற்

     பொருத்துற நினைத்த வண்ண முடிந்ததென் றுரைபுக் காலக்

     கருத்தினிற் பெருகா நந்தக் களிப்பையார் கணிக்க வல்லார்.

42

      (இ-ள்) அன்றியும்,  செவ்வைப் படுத்திய பொன்னினாற் செய்யப்பட்ட பசிய ஆபரணங்களையுடைய சேயிழை யாகிய அந்தப் பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களின் விவாகத்தை விரும்பி வேதனை யடைந்து அறிவை யொழித்துப் பிரதி தினமுந் துன்பப் படா நிற்கும் இதயத்தி னிடத்துப் பொருத்த முற எண்ணிய பிரகாரம் நிறைவேறிற் றென்று ஓர் வார்த்தை யானது போய்ச் சேருமே யானால் அந்தச் சிந்தையி னிடத்துப் பொங்குகின்ற ஆனந்தத்தினது மகிழ்ச்சியை கணிக்க வல்லவர்கள் யாவர்? ஒருவருமில்லர்.

 

3083. அகலிடம் விளங்கு மைந்நூ றிரசிதத் தரிய காசு

     மகரென வலிக்க னாதி வதுவையை முடித்தா னென்னப்

     பகரருங் கற்பின் மிக்க பாத்திமா செவியிற் சாற்ற

     விகலறும் வேத வாய்மை முகம்மதங் கிசைத்தா ரன்றே.

43

      (இ-ள்) அன்றியும், பகைமை யானது அறப் பெற்ற புறுக்கானுல் அலீ மென்னும் வேதத்தினது உண்மையை யுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் விசாலித்த இப் பூமியின் கண் விளங்கா நிற்கும் அருமையான ஐந்நூறு பொற் காசு மகரென்று சொல்லி அலி யிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களுக்கு அநாதியாகிய அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவானவன் விவாகத்தை நிறைவேற்றினா னென்று சொல்லுதற்கரிய கற்பினால் மேன்மைப் பட்ட பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களின் காதுகளினிடத்தில் போய்ச் சொல்லும் வண்ணம் கற்பித்தார்கள்.

 

3084. அருமறை முதியோ ரேகி யிறையவ னலியார்க் கின்பத்

     திருமண முடித்தா னென்னச் செபுறயீ லுரைத்த வாறு

     மருமலர் வாகைத் திண்டோண் முகம்மது மகிழ்ந்த வாறும்

     புரிகுழ னவ்வி பாத்தி மாமுனம் புகன்றிட் டாரால்.

44