பக்கம் எண் :

சீறாப்புராணம்

1142


இரண்டாம் பாகம்
 

அன்ஹா அவர்கள் கூறிய வார்த்தை யானது இஃதென்று சொல்ல, மகா தவத்தை யுடையவர்களான அவர்களுக்கு உதவியைப் புகலா நிற்கும் ஜிபுரீ லலைகிஸ்ஸலா மவர்கள் சந்தோஷத் தோடுஞ் சென்று இந்தப் பூமியினிடத்துத் தங்கிய உடல்களினது உயிர்கள் தோறும் பொருந்தி வாழுகின்ற யாவற்றிற்கும் முதன்மையனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவினது சந்நிதானத்தில் காருண்ணியத்தைக் கொண்ட கடைக் கண்களினாற் பார்த்துச் சொல்லி நின்றார்கள்.

 

3095. பாவைய ருரைத்த வண்ணம் பச்சையங் கடுதா சின்கண்

     மேவரக் கனக மையால் வரிபட விளங்கத் தீட்டிச்

     சேவையி னினைவு மாறாச் செவ்விய சபுற யீல்பா

     லீவதீ தென்ன வோதி யிறையவ னளித்திட் டானால்.

55

      (இ-ள்) அவ்வாறு நிற்க, யாவற்றிற்கும் இறைவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவானவன் பாவைய ராகிய அந்தப் பாத்திமா றலி யல்லலாகு அன்ஹா அவர்கள் கேட்ட பிரகாரம் அழகிய பச்சைக் கடிதத்தினிடத்துப் பொன்னினா லான மையினால் வரிபட விளங்கும் வண்ணம் அன்பான துண்டாகும்படி எழுதி ஊழியத்தினது சிந்தனை யானது மாறப் பெறாத அழகிய ஜிபுரீ லலைகிஸ்ஸலா மவர்களிடத்து நீவிர் கொடுப்பது இஃதென்று சொல்லிக் கொடுத்தான்.

 

3096. வரைந்தபா சுரத்தை யேந்தி வானிழிந் தமரர் கோமான்

     கருந்தடங் கண்ணார்க் கென்ன நபிதிருக் கரத்தில் வைத்தார்

     விரிந்தபூங் கமல மன்ன மென்முகஞ் சேர்த்தி முத்திப்

     பரிந்தொரு துணைவர்க் கீந்து பாசுரம் விளக்கென் றாரால்.

56

      (இ-ள்) தேவர்க ளாகிய மலாயிக்கத்து மார்களுக்கு அதிபதியான ஜிபுரீல் அலைகிஸ்ஸலாம் அவர்கள் அவ்வித மெழுதிய அந்தக் கடிதத்தைக் கைகளாற் றாங்கிக் கொண்டு வானலோகத்தை விட்டு மிறங்கிக் கரு நிறத்தைக் கொண்ட பெரிய கண்களை யுடையவர்களான பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களுக்கென்று நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் தெய்வீகந் தங்கிய கைகளில் வைத்தார்கள். அஃதை அவர்கள் தங்களின் மலர்ந்த அழகிய தாமரைப் புட்பத்தை நிகர்த்த மெல்லிய வதனத்தில் கண் பொருத்தி முத்தமிட்டு அன்புடன் ஒரு துணைவரின் கையிற் கொடுத்து இந்தக் கடிதத்தை வாசித்துக் காட்டு மென்று கேட்டார்கள்.