பக்கம் எண் :

சீறாப்புராணம்

1147


New Page 3

இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு எழும்பி ஒட்டகங்க ளானவை அழகைப் பொருந்தும் வண்ணம் பரிமளத்தைக் கொண்ட வெண்ணிறத்தை யுடைய சுதையினால் தேய்த்து நீண்ட கழுத்தி னிடத்துப் புஷ்பங்களினாற் செய்யப் பட்ட மாலைகளை நிறைத்து இடியைப் பார்க்கிலும் அதிகமாய் ஒலிக்கும் முரசங்களை எடுத்து எடுத்துச் சுமத்தி இப் பூமியை அளக்கா நிற்கும் அந்தத் திரு மதீனமா நகரத்தினது வீதிக ளெல்லாவற்றிலும் பரந்து போயினார்கள்.

 

3109. எடுத்த பேரொலி முரசொடு மொட்டகத் திருந்து

     பிடித்த நன்மறைத் தீனொடு பெருந்துனி யாவு

     முடித்த நல்வழித் தொழுகையின் விதிவழி முயன்று

     தொடுத்து நாடொறும் வாழ்கவென் றினையன துதித்தே.

69

 

      (இ-ள்) அவ்விதம் போய், பெரிய ஓசையைத் தாங்கிய முரசங்களுடன் அவர்களும் அந்த ஒட்டகங்களின் மீது தங்கி நாம் பிடித்த நன்மை பொருந்திய புறுக்கானுல் மஜீ தென்னும் வேதத்தை யுடைய தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தோடு பெரிய இந்த உலகமும் நிறைவேற்றிய நல்ல சன்மார்க்கத்தினது தொழுகையின் விதியைக் கொண்ட நெறியில் முயற்சித்துப் பற்றிப் பிரதி தினமும் வாழ்க வென்று இப்படிப் புகழ்ந்து.

 

3110. இறைவ வன்றிருப் புலிக்குநந் நபியிளங் கொடிக்கு

     மறுவி லாத்திரு மங்கலச் சோபன வசனஞ்

     செறியும் பேரெழி றதும்பிய திருநகர் மதீனத்

     தறிவ ராடவ ரியாவரு மறிகவென் றறைவார்.

70

 

      (இ-ள்) யாவற்றிற்கும் இறைவ னான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் தெய்வீகந் தங்கிய புலியாகிய அலி றலி யல்லாகு அன்கு அவர்களுக்கும் நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் இளம் பிராயத்தைக் கொண்ட கொடியாகிய காத்தூனே ஜன்னத் பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களுக்கும் களங்க மற்ற அழகிய மங்களத்தினது சோபன வசனத்தை நெருங்கிய பெரிய அழகைத் ததும்பப் பெற்ற தெய்வீகந் தங்கிய மதீனமா நகரத்தினது அறிவாளிகள் புருடர்களாகிய அனைவரும் அறியக் கடவரென்று அறைவார்கள்.

 

3111. கனந்த ருங்கொடை முகம்மதைக் கவினலிப் புலியைச்

     சினந்த வேல்விழி பாத்திமா வெனுஞ்செழுங் குயிலை

     நினைந்த கவ்வைக ளெவ்வையுந் தனிநிறை வேற

     மனந்த னிற்றினம் புகழொடு முவப்புவைத் திடுமின்.

71