பக்கம் எண் :

சீறாப்புராணம்

1148


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அன்றியும், மேகத்தைப் போலுந் தரா நிற்குங் கொடையை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களை, அழகிய அலி யிபுனு அபீத்தாலிபு றலி யல்லாகு அன்கு ஆகிய புலி யானவர்களை, கோபியா நிற்கும் வேலாயுதத்தைப் போன்ற கண்களை யுடைய காத்தூனே ஜன்னத் பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா வென்று சொல்லுஞ் செழிய குயி லானவர்களை, சிந்தித்த காரியங்களியாவும் ஒப்பற முடியும் வண்ணம் இதயத்தின் கண் பிரதி தினமும் கீர்த்தி யோடும் பிரியம் வைத்திடுங்கள்.

 

3112. சுருதி நேர்தவ றின்றியஞ் சொகுத்தினுந் தொழுமின்

     வரிசை நன்னினை வொடும்சதக் காவழங் கிடுமின்

     பெருகு நல்லறி வினர்துஆப் பேறுகள் பெறுமின்

     றரையின் மீதுற வாழ்ந்துச லாமத்தும் பெறுமின்.

72

      (இ-ள்) அன்றியும், புறுக்கானுல் மஜீ தென்னும் வேதத்தின் ஒழுங்கானது தவறாமல் ஐந்து நேரத்திலுந் தொழுங்கள். சங்கையைக் கொண்ட நல்ல சிந்தனை யோடும் சதக்காவைக் கொடுங்கள். ஓங்கா நிற்கும் நன்மை பொருந்திய அறிவாளிகளின் துஆவினது பதவிகளை யடையுங்கள். இப் பூமியின் மீது மிகவும் வாழ்ந்து சலாமத்தைப் பெறுங்கள்.

 

3113. அருவி நன்னதி யாடிநல் லாடைக ளுடுமின்

     புரிகு ழற்ககில் புசைத்துவெண் புதுமலர் புனைமின்

     சொரிக திர்ப்பணி பலகளத் திடைசுமத் திடுமின்

     விரைசெய் சந்தனக் குங்குமக் கலவைமெய்க் கிடுமின்.

73

      (இ-ள்) அன்றியும், அருவியைக் கொண்ட நல்ல ஆறுகளில் ஸ்நானஞ் செய்து நல்ல வத்திரங்களை யுடுத்துங்கள். முறுக்கை யுடைய கூந்தலுக்கு அகிற் கட்டைகளைப் புகைத்து வெண்ணிறத்தைப் பெற்ற புதிய புஷ்பங்களைச் சூடுங்கள். கழுத்தின் கண் பிரகாசத்தைச் சிந்தா நிற்கும் பல ஆபரணங்களைச் சுமத்துங்கள். சரீரத்திற்கு வாசனையைச் செய்கின்ற சந்தனக் குழம்பையுங் குங்குமக் கலவைகளையும் அணியுங்கள்.

 

3114. இலங்க முன்றில்க டொறுஞ்செழும் பூம்பந்த ரிடுமி

     னலங்கொ ளாடைவி மானங்க டோரண நடுமின்

     விலங்கன் மாடங்கள் வயின்வயின் கொடிவிசித் திடுமின்

     பொலன்கொ ணன்னகர்ச் சுவர்தொறுங் கோலங்கள் புனைமின்.

74