பக்கம் எண் :

சீறாப்புராணம்

1150


இரண்டாம் பாகம்
 

சந்தன குழம்பையும், கூந்தலின் கண்ணிருந்து கழித்து வீசிய புஷ்பங்களையும், அழுந்தா நிற்கும் புணர்ச்சியினது ஊடலினால் நீக்கிய பொன்னினாற் செய்யப்பட்ட ஆபரணங்களையும், எழும்புகின்ற துகளினது படலமானது உண்டாகும் வண்ணம் கைகளால் வாரி நின்று வீசுவார்கள்.

 

3118. சிறுது ளைக்கதிர்ப் பொற்பல கணிநிரை செறிந்து

     பிறையு மங்குலு முடுக்களுஞ் செருகிடப் பிணங்கி

     நிறையு நெற்றிய மாடமு நிவந்தமே னிலையுந்

     துறும வூட்டகிற் பழம்புகைக் களங்கறத் துடைப்பார்.

78

      (இ-ள்) அன்றியும், சிறிய துவாரத்தைக் கொண்ட பிரகாசத்தைப் பெற்ற பொன்னினாற் செய்யப்பட்ட சாளரங்கள் வரிசையாக நெருங்கிச் சந்திரனும் மேகங்களும் நட்சத்திரங்களும் செருகும் வண்ணம் மாறுபட்டுப் பெருகிய உச்சியை யுடைய மாளிகைகளிலும் ஓங்கிய உப்பரிகைகளிலும் திரளும் படி யூட்டிய அகிற் கட்டையினது பழய தூமத்தின் குற்ற மானது அறும் வண்ணந் துடைப்பார்கள்.

 

3119. தெரிந்த வெண்மணி நீற்றினைக் கரைத்தறத் தெளித்துப்

     பரிந்து நோக்குநர் கண்களும் வழுக்குற்றுப் பதைப்ப

     விரிந்த பூங்குழ லார்கள்கண் ணாடியின் விளங்க

     விருந்த வாய்தொறு முருத்தெரி தரமெழுக் கிடுவார்.

79

      (இ-ள்) அன்றியும், மலர்ந்த புஷ்பங்களினா லான மாலையைத் தரித்த கூந்தலை யுடைய பெண்கள் ஆராய்ந் தெடுத்த வெண் ணிறத்தைக் கொண்ட முத்துக்களாற் செய்யப் பட்ட சுண்ணத்தைக் கரைத்து மிகவுந் தெளியச் செய்து தரித்துப் பார்ப்பவர்களின் நயனங்களும் வழுக்குற்றுப் பதறும் வண்ணம் கண்ணாடியைப் போலும் விளங்கும்படி அங்கு தங்கிய இடங்களெல்லா வற்றிலும் வடிவ மானது தெரியப் பூசுவார்கள்.

 

3120. மறங்கி டந்தசெங் கதிரவன் கதிர்களு மதியின்

     பிறங்கி நீடரு கலைகளு மோரிடம் பிரியா

     தறங்கி டந்தநன் னகர்மதி டொறுமணி யணியா

     யிறங்கி யெங்கணும் வழிந்தெனக் கோலங்க ளிடுவார்.

80

      (இ-ள்) அன்றியும், கோப மானது கிடக்கப் பெற்ற செந்நிறத்தைக் கொண்ட சூரியனது கிரணங்களும் சந்திரனி லிருந்துப் பிரகாசித்து நீளா நிற்கும் கலைகளும், ஓரிடமும் நீங்காது புண்ணியமானது கிடக்கப் பெற்ற நன்மை பொருந்திய பட்டினமாகிய அந்தத் திரு மதீனமா நகரத்தினது மதில்களெல்லாவற்றிலும் வரிசை வரிசையாக இறங்கி எவ்விடத்தும் வழிந்ததைப் போன்று கோலங் ளிடுவார்கள்.