|
இரண்டாம் பாகம்
3121.
நெருங்கிச் சேந்தமென் விரலெனத்
தளிர்களு நீண்ட
கருங்கண் போற்செழுங்
குவளையு முககம லமும்போன்
றொருங்கு பூத்தசெவ் வாயென
வாம்பலு மொசியு
மருங்குல் போற்சிறு கொடிகளு
மெழுதுவர் மடவார்.
81
(இ-ள்) அன்றியும், இளம்
பிராயத்தைக் கொண்ட மாதர்கள் நெருக்க முற்றுச் செந் நிறமடைந்த மெல்லிய விரற்களைப் போலத்
தளிர்களையும், நீட்சியைக் கொண்ட கரு நிறத்தை யுடைய விழிகளைப் போலச் செழிய குவளைப் புஷ்பங்களையும்,
முகத்தைப் போலத் தாமரைப் புஷ்பங்களையும், நிகர்த்து ஒன்றாய் மலர்ந்த சிவந்த வாயைப்
போல ஆம்பன் மலரையும், ஒசியா நிற்கும் இடையைப் போலச் சிறிய கொடிகளையும் எழுதுவார்கள்.
3122.
சந்த னத்திர டருக்களை
கவையுறத் தறித்துப்
பந்தி பந்தியி னிறுவியொள்
ளகில்வளை பரப்பிச்
சிந்து வெண்கதி ரிரசிதக்
கிடுகுகள் செறித்து
மந்த மாருத முலவிடக் காவணம்
வகுப்பார்.
82
(இ-ள்) அன்றியும், திரண்ட
சந்தன மரங்களைக் கவ ரானது பொருந்தும் வண்ணந் தறித்து வரிசை வரிசையாக நிறுத்தி ஒள்ளிய அகிற்
கட்டைகளை அதன் மேல் உத்திரமாகப் பரப்பி அதில் வெள்ளிய பிரகாசத்தைப் பொழிகின்ற
வெள்ளியினாற் செய்யப்பட்ட சட்டப் பலகைகளைச் செறியச் செய்து இளம் தென்றற் காற்றானது உலாவும்
வண்ணம் பந்தற்களைப் போடுவார்கள்.
3123.
கழிக ளிற்பொதிந் தகுமது
நபிதிருக் கலிமா
வெழுது சித்திரப்
பொற்கொடி யணிநிரைத் திடுவார்
வழுவி லாதபொன் மலையின்வி
மானங்கள் வகுப்பார்
பொழுது போம்வழி யில்லெனத்
தோரணம் புனைவார்.
83
(இ-ள்) அன்றியும், வத்திரங்களைக்
கொம்புகளிற் பொதிந்து அஹ்ம தென்னுந் திரு நாமத்தை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் தெய்வீகந் தங்கிய ழுலாயிலாஹ இல்லல்லாகு
முகம்மதுர்ற சூலுல்லாஹிழு யென்னுங் கலிமாவை எழுதிய சித்திரத்தைக் கொண்ட பொன்னினாற் செய்யப்
பட்ட துவசங்களை வரிசை வரிசையாக நிறுத்துவார்கள். குற்ற மற்ற மகா மேருப் பருவத்தைப் போலும்
விமானங்களை வகைப்படுத்தி யியற்றுவார்கள். சூரிய னானவன் செல்லுகின்ற பாதை யானது இல்லை யென்று
சொல்லும் வண்ணந் தோரணங்களை அலங்கரித்துக் கட்டுவார்கள்.
|