பக்கம் எண் :

சீறாப்புராணம்

1154


இரண்டாம் பாகம்
 

3131. காத்திர முசல நீள்கைக் கடகரிக் குலமு மாவும்

     பூத்துணர் பொதுளு மாந்தர்த் தொகுதியு மெதிரிற் போதல்

     வாய்த்தமெல் லிழையார் தீற்று மணியொளி மறுகு தோறுஞ்

     சூத்திரப் பாவை போன்றும் வயின்வயின் றுலங்கு மன்றே.

91

      (இ-ள்) அன்றியும், சிறந்த மெல்லிய ஆபரணங்களையுடைய பெண்கள் தீட்டிய இரத்தின மணிகளின் பிரகாசத்தைக் கொண்ட வீதிக ளெல்லாவற்றிலும் கனத்தைப் பெற்ற உலக்கையை நிகர்த்த நீண்ட துதிக்கையையும் மதத்தையு முடைய யானைகளினது கூட்டமும் குதிரைக் கூட்டமும் பூங் கொத்துகளினாற் செய்யப்பட்ட மாலைகள் பொதுளுகின்ற மனுஷியர்களினது கூட்டமும் எதிரிற் சொல்லுதல், சூத்திரத்தினா லான பாவைகளை நிகர்த்தும் இடங்கள் தோறும் பிரகாசியா நிற்கும்.

 

3132. புதுமலர்த் தார்க ணாற்றிப் பூந்துகிற் கொடிகள் சேர்த்திக்

     கதிர்மணி குயிற்றிக் கும்பக் கனகமா மகுடஞ் சூட்டி

     விதிரிள நிலவு கான்ற மேனிலை மாட மியாவும்

     வதுவையின் புதுமை நோக்க மலைகள்வந் திருந்த தொத்த.

92

      (இ-ள்) அன்றியும், புதிய புஷ்பங்களினாற் செய்யப்பட்ட மாலைகளைத் தூக்கி அழகிய வத்திரத்தினாலான துவசங்களைச் சேரக் கட்டிப் பிரகாசத்தைக் கொண்ட இரத்தினங்களைப் பதித்துக் கும்பமாகிய பெருமை பொருந்திய பொற் கிரீடஞ் சூட்டி அசைகின்ற இளம் பிரகாசத்தைக் கக்கிய மேனிலையை யுடைய மாடங்கள் முழுவதும், அவ் விவாகத்தினது ஆச்சரியத்தைப் பார்க்கும் வண்ணம் மலைகள் வந்துறைந்தனவற்றை நிகர்த்தன.

 

3133. சீதசந் திந்து காந்த நீரினிற் றேய்வை பன்னீ

     ராதிமான் மதங்கற் பூர மளறெழக் கலக்கி வாரி

     வீதியு மதிளு மாட வாயிலுந் தெளித்து வீசக்

     கோதறுங் குளிர்ச்சி யெய்தி நடுங்கின கொடிக ளெல்லாம்.

93

      (இ-ள்) அன்றியும், குளிர்ச்சியைக் கொண்ட சந்தனம், சந்திர காந்தம், பரிமளச் சாந்து, பன்னீர், முதலா யுள்ள கத்தூரி கற்பூர மாகிய இவைகளைச் சேறான துண்டாகும் வண்ணம் நீரிற் கலக்கி அள்ளித் தெருக்களிலும் சுவர்களிலும் மாளிகையினது வாயில்களிலும் தெளித்து வீச, அதனால் அங்குள்ள கொடிகள் யாவும் குற்ற மற்ற குளிர்ச்சியைப் பொருந்தி நடுக்க முற்றன.