பக்கம் எண் :

சீறாப்புராணம்

1158


இரண்டாம் பாகம்
 

அந் நகரத்தினது தெருக்களின் முற்றங்க ளெல்லாவற்றிலும் வரிசையாக வைப்பார்கள்.

 

3144. மருங்குன் மின்னுக்கு மின்னுபொன் னிழைத்துகில் வனைவார்

     நெருங்கு பூண்முலை மலையினின் மலைவுற நிரைப்பார்

     கருங்கு ழற்கருங் குங்குமக் கண்ணிகள் புனைவா

     ரருங்க ரங்களி லரங்கொளுங் குருகெடுத் தணிவார்.

104

      (இ-ள்) அன்றியும், அங்குள்ள மாதர்கள் இடைக ளாகிய மின்னலுக்குப் பிரகாசியா நிற்கும் பொன் னூலினாற் செய்யப் பட்ட வத்திரங்களைக் கட்டுவார்கள். முலைகளாகிய மலைகளின் கண் மலைவுறும் வண்ணம் நெருங்கிய ஆபரணங்களை வரிசையாகப் போடுவார்கள். கரு நிறத்தைக் கொண்ட கூந்தலுக்கு அருமையான குங்குமப் புஷ்பத்தினாற் செய்யப்பட்ட மாலைகளைச் சூடுவார்கள். அரிய கைகளில் அரத்தினால் தேய்த்தலைக் கொண்ட வளையல்களை எடுத்துத் தரிப்பார்கள்.

 

3145. மாவ ருக்கையிக் கரம்பைபூங் கமுகுடன் வனைந்த

     காவ கத்திடை மயிலெனக் குயின்மொழிக் கனிவாய்ப்

     பூவை யன்னவர் கலவையும் பரிமளப் பொடியுந்

     தாவ வெற்றுவ ரொருவருக் கொருவரைச் சருவி.

105

      (இ-ள்) அன்றியும், மா, பலா, கரும்பு, வாழை ஆகிய இவைகளைப் புஷ்பங்களை யுடைய கமுகோடும் அலங்கரித்த காவகத்தினிடத்து மயி லென்று சொல்லும் குயிலை நிகர்த்த வார்த்தைகளையும் தொண்டைக் கனியை யொத்த வாயையுமுடைய கிளிக் கொப்பான மாதர்க ளொருவருக் கொருவரைப் பொருதித் தாவும் படி சந்தனக் குழம்பையும் வாசனைப் பொடிகளையும் வீசுவார்கள்.

 

3146. விரிசி கைக்கதிர் மணிவெயி லெறித்திட விடுபூச்

     சொருகு கூந்தலின் மாலைக டுயல்வரத் துடிபோ

     லருகு நுண்ணிடை யொடிந்திடு மெனும்படிக் கசையத்

     திருகு ரும்பைக ளாடுவர் வயின்வயின் சிறப்ப.

106

      (இ-ள்) அன்றியும், பெண்கள் விரிந்த சுவாலையைக் கொண்ட பிரகாசத்தை யுடைய இரத்தினங்கள் ஒளிவைப் பிரகாசிக்கவும், மலர்ந்த புஷ்பங்களைச் சொருகிய கூந்தலிற் சூடிய மாலைகள் அசையவும், துடியைப் போலுங் குறையா நிற்கும் நுண்ணிய மருங்கு லானது ஒடியு மென்று சொல்லும் வண்ணம் அசையவும், இடங்கள் தோறும் சிறக்கும்படி அழகிய குரும்பைக ளாடுவார்கள்.