பக்கம் எண் :

சீறாப்புராணம்

1179


இரண்டாம் பாகம்
 

3196. வாங்குவிற் றடக்கை வேந்தர் வாளலி வதன நோக்கிப்

     பூங்கொடி வருந்தி நெஞ்சத் தறிவெலாந் துயரம் போர்ப்பக்

     கோங்கிள முலையின் செம்பொற் கொடியென வென்னைச் சூழ்ந்த

     பாங்கிய ரெங்கே ரென்னப் பாங்கியர் தம்மைக் கேட்டாள்.

156

      (இ-ள்) அவ்வாறு வந்து வளைக்கா நிற்கும் கோதண்டத்தைத் தாங்கிய பெரிய கையை யுடைய அரசரான வாளாயுதத்தைக் கொண்ட அவ் வலி யிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களின் முகத்தைப் பார்த்துப் பூவைப் பொருந்திய கொடியைப் போன்ற அப் பெண்ணானவள் வருத்த முற்றுத் தனது நெஞ்சத்தின் அறிவை யெல்லாம் துயர மானது மூடிக் கொள்ள, கோங்க மலரை யொத்த இள முலைகளை யுடைய சிவந்த பொன்னினாற் செய்யப்பட்ட கொடியை யொத்த என்னை வளைந்த தோழியர்களை எங்கே? என்று அந்தத் தோழியர்களையே கேட்டாள்.

 

3197. காழ்த்தடக் களிறு சூழ வந்தகா வலரை நோக்கி

     வீழ்த்தன ளறிவை நாண விருப்பினான் மெல்ல மெல்ல

     வீழ்த்தனள் வாரா தாலோ வென்னையோ பாலிற் சூழ்ந்து

     வாழ்த்திநின் றவரை யெல்லாம் வைதுகொண் டரிவை நின்றாள்.

157

      (இ-ள்) அன்றியும், அரிவைப் பருவத்தை யுடைய பெண்ணானவள் மணிவடத்தைக் கொண்ட பெரிய யானைகள் சூழும் வண்ணம் பவனி வந்த அரசராகிய அந்த அலி யிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களைப் பார்த்து வெட்கத்தினால் தனது அறிவை விழுவித்து ஆசையினால் பைய பைய இழுத்து இழுத்ததில் வாராததினாலோ? வேறு யாது காரணத்தினாலோ? பக்கத்தில் வளைந்து துதித்து நின்றவர்க ளியாவரையும் ஏசிக் கொண்டு நின்றாள்.

 

3198. பெரும்படைத் தலைவர் சூழ வரும்பிரான் வதன நோக்கி

     யரும்பிய துயர வெள்ள மடிக்கடிப் பெருக லாலே

     வரம்பெறு நாணும் போக்கி மதிமயக் குற்றிவ் வள்ளற்

     றிரும்பலிற் சொல்வே னென்னச் சினந்தொரு தெரிவை போனாள்.

158

      (இ-ள்) அன்றியும், தெரிவைப் பருவத்தை யுடைய ஒரு பெண்ணானவள் பெரிய சேனைத் தலைவர்கள் சூழும் வண்ணம் பவனி வருகின்ற பிரானாகிய அவ் வலி யிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களின் முகத்தைப் பார்த்துத் தோன்றிய துன்ப மாகிய நீர்ப் பெருக்கானது அடிக்கடி பெருகுவதினால்