|
மடற
இரண்டாம் பாகம்
3213.
மடற்றிகழ் காதிற் செம்பொன்
மணிப்பணி நிரையிற் சேர்த்தி
மிடற்றெழில் கவர வந்த
மின்னென மிளிர்ந்து தோன்றுஞ்
சுடர்பிறை வடத்தைச் சூடிச்
சொரிகதிர் வடங்கள் சேர்த்துக்
கொடிக்கரும் பெழுது தோண்மேற்
கொழுமணிக் கோவை சேர்த்தார்.
173
(இ-ள்) அன்றியும், மடலானது
பிரகாசியா நிற்கும் காதுகளினிடத்துச் சிவந்த பொன்னினாற் செய்யப்பட்ட இரத்தினங்கள் பதித்த
ஆபரணங்களை வரிசையாகப் பொருத்திக் கழுத்தினது அழகைக் கவரும்படி வந்து மின்னலைப் போலும் பிரகாசித்துத்
தோற்றுகின்ற ஒளிவைக் கொண்ட பிறை வடத்தைச் சூடிக் கிரணங்களைச் சிந்துகின்ற மாலைகளைச் சேரப்
போட்டு நீண்ட கரும்பை எழுதுகின்ற தோளின் மீது செழிய இரத்தினக் கோவைகளைச் சேர்த்தார்கள்.
3214.
ககனமும் புவியு மில்லாக் கவின்பழுத்
தொழுகுங் கையின்
மகிதல முழுதும் விற்கும் வச்சிரக்
கடகம் பூட்டிப்
பகிரொளி காந்த ளங்கை விரலெனும்
பவளக் கொப்பின்
முகிழலர் பூத்த தெனன முத்துமோ
திரங்க ளிட்டார்.
174
(இ-ள்) அன்றியும்,
வான லோகத்திலும் பூலோகத்திலு மில்லாத அழகானது கனிந்து சிந்தா நிற்குங் கரங்களினால் இப்பூமி
முழுவதையும் விற்கின்ற வச்சிரத்தினாற் செய்யப்பட்ட வளையல்களைச் சூட்டிப் பகிர்ந்த பிரகாசத்தைக்
கொண்ட கார்த்திகைப் புஷ்பத்தை நிகர்த்த அழகிய கை விரல்க ளென்று சொல்லும் பவளக்
கொம்புகளினிடத்து மொட்டுகளாகிய புஷ்பங்கள் மலர்ந்ததைப் போலும் முத்துக்களைப் பதிக்கப்
பட்ட மோதிரங்களைத் தரிப்பித்தார்கள்.
3215.
நதிக்கரை கடற்குட் பாரின்
விளைந்தநன் மணிக ளெல்லாஞ்
செதுக்கிப்பொன் னிழையிற்
கோத்த வடத்தொடுஞ் சேர்வையாக்கிக்
கதிர்க்கட வுளும்வான் பூத்த
கணங்களுஞ் சசியுங் கூடிப்
புதுக்குடி யிருந்த தென்னப்
பொருந்துமே கலையுஞ் சேர்த்தார்.
175
(இ-ள்) அன்றியும், ஆற்றங்
கரைகளிலும் சமுத்திரத்தினகத்தும் பூமியி னிடத்தும் விளைந்த நல்ல இரத்தினங்களெல்லாவற்றையுஞ்
செதுக்கிப் பொன்னினாற் செய்யப்பட்ட நூலிற் கோத்த கோவையோடுஞ் சேர்வை யாக்கிச் சூரியனும்
ஆகாயத்தின் கண் மலர்ந்த நட்சத்திரங்களும் சந்திரனும் ஒன்று சேர்ந்து புதிதாக குடியிருந்ததைப்
போன்று பொருந்திய மேக லாபரணத்தையும் பொருத்தினார்கள்.
|