பக்கம் எண் :

சீறாப்புராணம்

1186


இரண்டாம் பாகம்
 

3216. வடிநறா வனசப் போது மாவிளந் தளிரு மொவ்வா

     வடிமிசை யூட்டும் பஞ்சி னலகத்தக மலர்த்தி நாளும்

     பிடியின நடையைக் கற்பான் பெட்புறும் பதத்திற் செம்பொற்

     சுடர்மணிச் சதங்கை தண்டை பாடகஞ் சூட்டி னாரால்.

176

      (இ-ள்) அன்றியும், தேனைச் சிந்தா நிற்கும் தாமரைப் புஷ்பமும் மாமரத்தினது இளந்தளிரும் ஒப்பாகாத அடியின் மீது ஊட்டுகின்ற செம்பஞ்சின் குழம்பை மலரும்படி யூட்டுவித்துப் பிரதி தினமும் பெட்டை யானைக் கூட்டங்கள் நடையைக் கற்றுக் கொள்ளும் பொருட்டு ஆசைப் படுகின்ற பாதத்தி னிடத்துச் சிவந்த பொன்னினாற் செய்யப்பட்ட ஒளிவைக் கொண்ட இரத்தினங்கள் பதித்த சலங்கைகளையும் தண்டைகளையும் பாடகங்களையுஞ் சூட்டினார்கள்.

 

3217. பொன்னினு மணியி னாலும் பூந்தொடைக் கற்றை யாலு

     மின்னினை மறைத்துச் சற்றே வெளியிடை கிடந்த தெல்லாந்

     துன்னிய களபச் சேற்றாற் றடவிமெய் துலங்கச் செய்து

     கன்னியர் சூழ்ந்து வாழ்த்திக் கண்ணெச்சில் கழித்திட் டாரால்.

177

      (இ-ள்) அன்றியும், பொன்னினாலும், இரத்தினங்களினாலும், புஷ்பங்களினாற் செய்யப்பட்ட மாலைகளின் தொகுதியினாலும் அவர்களின் சரீர மாகிய மின்னலை மறையச் செய்து சற்று வெளியினிடத்துக் கிடந்த எல்லாவற்றையும் நெருங்கிய களபச் சேற்றினாற் பூசித் தேகத்தைப் பிரகாசிக்கும் வண்ணஞ் செய்து கன்னிப் பருவத்தை யுடைய பெண்கள் வளைந்து துதித்துக் கண் திருட்டியுங் கழித்தார்கள்.

 

3218. மரகதச் சுடரைச் சேந்த மாணிக்கக் கொழுந்தைப் பூவிற்

     பிரிவுறாப் பொன்னை மின்னைப் பெண்ணலங் கனியை யெய்தாப்

     பரகதிப் பேறை வாழ்வை பாத்திமா வென்னு மந்த

     வரசிளங் குயிலைப் பூவி னணைமிசை நடத்தி னாரால்.

178

      (இ-ள்) அவ்வாறு கழித்து மரகத மணியினது பிரகாசமும் செந்நிறத்தைக் கொண்ட மாணிக்க மணியின் கொழுந்தும், தாமரைப் புஷ்பத்தினிடத்து நீங்கா துறைகின்ற இலக்குமியும், மின்னலும் பெண்களில் நலத்தைக் கொண்ட கனியும், அடையக் கூடாத பரகதியினது பதவியும், வாழ்வு மாகிய பாத்திமா றலி யல்லாகு அன்ஹா என்று கூறும் அந்த அரசான இளம் பிராயத்தை பெற்ற குயிலானவர்களைப் பூவினாற் செய்யப்பட்ட அணையின் மீது நடத்தினார்கள்.