பக்கம் எண் :

சீறாப்புராணம்

1234


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு சென்று அந்த ஷாமிராச்சியத்திற் போய்ச் சேர்ந்து இலாப மானது இரண்டு பங்கிற் கதிகமாகும்படி அவைகளை விற்றுப் பிற்பாடு இந்தத் திரு மக்கமா நகரத்திற்கு இசையப் பெற்ற சரக்குக ளெல்லாவற்றையும் வாங்கி மூட்டைகளாகச் செய்து அம் மூட்டைகளை அங்குப் பொருந்திய குதிரை, எருது, வரிகளைக் கொண்ட நீண்ட கழுத்தை யுடைய ஒட்டகமாகிய இவைக ளெல்லாவற்றிலுஞ் செறியும் வண்ண மேற்றிக் கூட்டங் கூட்டமாக.

 

3358. இருநிதிச் செல்வர் நாற்ப திலக்குறுந் தலைவர் சூழ

     மருமலர்த் தொடையல் வேய்ந்த வரைப்புயன் கறுபு மைந்த 

     னருளறம் பயிலாச் சிந்தை யபாசுபி யானு மாகத்

     தெரிவருஞ் செம்பொற் குப்பைத் திரளொடும் வருகின் றாரால்.

7

      (இ-ள்) பெருமை பொருந்திய திரவியத்தை யுடைய செல்வர்களான நாற்ப தென்னு மெண்ணத்தை யுற்ற தலைமைத் தனத்தை யுடைய காபிர்கள் சூழும் வண்ணம் வாசனை தங்கிய புஷ்ப மாலையைப் பூண்ட மலையை நிகர்த்த தோள்களை யுடையவனான கறு பென்பவனின் புதல்வனாகிய காருண்ணியத்தைக் கொண்ட புண்ணியத்திற் பழகாத மனத்தை யுடைய அபாசுபியா னென்பவனுமாகத் தெரித்தற் கரிய செந்நிறத்தைப் பொருந்திய பொற் குவியலினது கூட்டத்தோடும் வருகின்றார்கள்.

 

3359. ஈதுபோ னமக்கு வாய்த்த திலையொரு காலத் தேனு

     மாதவ விஃதென் றோதி வாய்புதைத் தொருங்கு நின்றார்

     சூதர மொழியார் சிந்தை தொட்டமெய் யெழில்சேர் வள்ளல்

     காதினுட் புகுந்து மாற்றங் கருத்தையும் வியத்திற் றன்றே.

8

      (இ-ள்) இதைப் போலும் நம்மவர்கட்கு ஒரு காலத்துஞ் சித்திக்கவில்லை. மகா தவத்தை யுடைய நபிகட் பெருமானே! இஃது தான் சமாச்சாரமென்று சொல்லி வாயைப் பொத்தி அடக்கமாக நின்றார். அச் சமாச்சாரமானது சூதாகிய இரும்புக்கு அரத்தை நிகர்த்த வார்த்தையை யுடையவர்களான மாதர்களின் மனமானது இணைந்திருந்த திரு மேனியினது அழகைப் பொருந்திய வள்ளன்மையை யுடையவர்களாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் செவிகளினகம் நுழைந்து அவர்களின் கருத்தையும் வியக்கச் செய்தது.