பக்கம் எண் :

சீறாப்புராணம்

1306


இரண்டாம் பாகம்
 

கையிற்பிடித்த வாளாயுதமும் பிரகாசிக்கும்படி அந்த யுத்தக்களத்தில் சரிந்திருந்து மாண்டவனை, நரிகளும் நாய்களும் உண்ணுவதற்குச் சென்று பார்த்து இவன் மாண்டவ னல்லனென்று மனதின்கண் பயமடைந்து விரைவிற் பதுங்கி அடிக்கடி பார்த்துத் திரிவன வாகிய பலவற்றையும் பார்த்தார்கள்.

 

3571. எள்ளிட விடமற் றளந்தறி யெண்சா

          ணுடம்பினு மிடனற நெருங்கி

     யள்ளிலை நெடுவா ளிகளுறைந் திருந்த

          ஆடவர் தோற்றமங் கடைந்த

     வள்ளுகிர் சுணங்கு மிகலனுந் திரிந்த

          விடத்தின்முண் மாவும்வந் திணங்கி

     யுள்ளுறுங் களத்திற் கிடப்பன போன்றுங்

          கண்டனர் பலபல வொருங்கே.

220

      (இ-ள்) அன்றியும், அளவிட்டுத் தெரிகின்ற எண்சாண் நீளத்தைக் கொண்ட சரீரங்களிலு மிடமில்லாமற் செறிந்து மாமிசத்தை யள்ளுகின்ற இலைகளையுடைய நீண்ட அம்புகள் தங்கி எள்ளிடுவதற்கு இடமில்லாது இருந்த ஆடவர்களாகிய வீரர்களது தோற்றமானது, அந்த யுத்தக்களத்தில் வந்து சேர்ந்த கூர்மை தங்கிய நகங்களையுடைய நாய்களும் நரிகளும் அலைந்த அத்தானத்தில் முள்ளம் பன்றியும் வந்து பொருந்திக் கருதுகின்ற அந்த யுத்தக்களத்தில் கிடப்பவற்றைப் போன்றும் ஒரு தன்மையாகப் பற்பலவற்றைப் பார்த்தார்கள்.

 

3572. பறவைகள் குலவுஞ் சிறைநிழற் பந்தர்ப்

          பக்கரைப் பரியணைச் சாய்ந்து

     மறமுதிர் சினக்க ணிமைப்பில விழித்து

          மணிவிரன் மீசையிற் சேர்த்திக்

     குறைவற வலகை நடம்பல பயிலக்

          கொடுங்களக் குருதிநன் னிலத்தி

     னிறையுயிர் போக்கி யரசுவீற் றிருந்த

          விடங்களு நிறைந்தன கண்டார்.

221

      (இ-ள்) அன்றியும், சில காபிர்கள் பட்சிக ளுலாவுகின்ற சிறகுகளினது நிழலைக் கொண்ட பந்தல்களில் சேணத்தையுடைய குதிரைகளாகிய மெத்தைகளிற் சாய்ந்து கொலையானது முதிரப் பெற்ற கோபத்தைக் கொண்ட விழிகளை இமைக்காது விழித்து அழகிய விரல்களை மீசையிற் பொருத்திப் பைசாசங்கள் குறைவின்றிப் பல கூத்துகளை யாட இரத்தத்தையுடைய கொடிய யுத்தக்களமாகிய நன்மை பொருந்திய அந்தத் தானத்தில் தங்களது தேகத்தில் நிறைந்த பிராணனைப் போக்கடித்து அரசாக வீறுடனிருந்து இடங்களையும் நிறைந்தனவாகப் பார்த்தார்கள்.