பக்கம் எண் :

சீறாப்புராணம்

1308


இரண்டாம் பாகம்
 

     பலவிதழ் விரித்துச் செந்நறாத் துளித்த

          பதுமமென் காட்டிடை புகுந்து

     குலவிய வனத்தின் குலங்கள் வீற்றிருந்த

          கோலமொத் தனவுங்கண் டனரால்.

224

      (இ-ள்) அன்றியும், தாமரைப் புஷ்பத்தைப் போன்ற பிரகாசத்தை யுடைய கணக்கற்ற முகங்கள் பரவிக் கிடந்த இரத்தமாகிய அழகிய சேற்றில் இடைக்கிடைப் பிரகாசிக்கா நிற்கும் வெண்ணிறத்தை யுடைய குடைகள் பதிந்து நிறைந்து பிரகாசிப்பவை, பசிய தடாகத்தினகம் பல இதழ்களை விரித்து செந்நிறத்தைக் கொண்ட மதுவைச் சிந்திய மெல்லிய தாமரைக் காட்டினிடத்து உலாவித் திரிகின்ற அன்னப்பட்சிகளது கூட்டங்கள் நுழைந்து வீறுடனிருந்த கோலத்தைப் போன்றவற்றையும் பார்த்தார்கள்.

 

3576. அரசர்க ளணிந்த முத்தவெண் மணிக

          ளுதிர்ந்துபைங் குருதியஞ் சேற்றில்

     விரிகதி ருமிழ்ந்து கிடப்பன வென்றூழ்

          விழுங்கிய செக்கர்வா னிடத்திற்

     பெருகிய தாரா கணம்பல கோடி

          பிறந்தொளி விரிப்பன போலுந்

     தெரிதர நோக்கி யடிக்கடி மகிழ்ந்து

          திரிந்தனர் சிலவய வீரர்.

225

      (இ-ள்) அன்றியும், வெற்றியை யுடைய சில வீரர்கள் இராஜர்கள் தங்களது தேகத்தின்கண் தரித்த முத்தமாகிய வெண்ணிறத்தையுடைய இரத்தினங்கள் பசிய இரத்தமாகிய சேற்றிற் சிந்தி விரிந்த பிரகாசத்தைக் கக்கிக் கிடப்பவைகளை, சூரியனை விழுங்கிய செவ்வானத்தினிடத்தில் மலிந்த பல கோடியளவான நட்சத்திரக் கூட்டங்க ளுதித்து தமது ஒளிவை விரிப்பவற்றைப் போலும் விளங்கும்படி அடிக்கடிப் பார்த்துச் சந்தோஷித்துத் திரிந்தார்கள்.

 

3577. கங்கமுங் கொடியுஞ் சகுந்தமு மோரிக்

          கணங்களு மிகலனுஞ் சுணங்குஞ்

     செங்களத் திடைக்குற் றுயிருட லருந்தத்

          தெறித்திடுங் குருதியிற் றிரிவ

     வெங்கதிர் நெடுவே லூறுகள் படமெய்

          வருந்திடா வீரரைப் போன்று

     மெங்கணும் பலகண் டடுபடைக் கலன்க

          ளிடுநெடும் புலத்திடைத் திரிந்தார்.

226