பக்கம் எண் :

சீறாப்புராணம்

1310


இரண்டாம் பாகம்
 

உமையா வென்பவன் சென்று எதிர்த்து மடிந்த தானத்தையும், வல்லமையைத் தரும் உமாறாவென்பவன் மடிந்த செந்நிறத்தையுடைய தானத்தையும் பகுப்புறும்படி இனிமையோடும் பார்த்தார்கள்.

 

3580. மறமுதிர் வீரர் தாண்மடித் தெதிர்ந்து

          மண்டமர் கடந்துசூழ்ந் திறந்து

     புறமிடங் குவிய வுறவின ரெவரும்

          போர்க்கடன் கழித்தவண் கிடப்பக்

     குறையுயி ருடலங் குருதிகொப் பிளிப்பக்

          கொடுஞ்சமர் பலவிளை யாடித்

     தெறுகள நாப்ப ணபூசகல் கிடப்பத்

          தீனவ ரினிதுகண் டனரால்.

229

      (இ-ள்) அன்றியும், தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தை யுடைய அவர்கள் வலிமையானது முற்றப் பெற்ற வீரர்கள் தங்களது கால்களை மடக்கி எதிர்த்து நெருங்கிய சண்டையிற் பாய்ந்து வளைந்து மடிந்து புறத்திலும் இடத்திலுங் குவியவும், உறவினர்க ளியாவரும் போர்க் கடனைத் தீர்த்து அங்குக் கிடக்கவும், குறைச் சீவனையுடைய தனது சரீரமானது இரத்தத்தைக் கக்கவும், கொடிய பல யுத்தங்களைச் செய்து போர் புரிந்து அழித்த அந்த யுத்தக் களத்தினது மத்தியில் அபூஜகி லென்பவன் கிடக்க, இனிமையோடும் பார்த்தார்கள்.

 

3581. கண்களிற் சேப்பு நுதலினில் வியர்ப்புங்

          னியமை மீசையின் முறுக்கும்

     புண்பட விதழிற் பற்பல்காற் சினந்து

          பூட்டிய கொடியவெள் ளெயிறு

     மண்பட வொழுகுங் குருதியி னனைவும்

          வடுப்படு முடலமு முயிர்ப்பும் 

     பண்பொடுந் தெரியக் களத்திடை கிடந்த

          பாதக னிடத்தினுற் றனரால்.

230

      (இ-ள்) அவ்வாறு பார்த்து விழிகளிற் சிவப்பும், நெற்றியில் வியர்ப்பும், கருநிறத்தினது அந்தகாரத்தை யொத்த மீசையில் முறுக்கும், புண்ணானது உண்டாகும் வண்ணம் மிகவும் அனேகமுறை கோபித்து உதடுகளிற் பூட்டிக் கடித்த கொடுமையைக் கொண்ட வெள்ளிய பற்களும், பூமியிற் படும்படி சிந்திய இரத்தத்தினது நனைவும், காயத்தைப் பொருந்திய தேகமும், பெருமூச்சும், தெரியும்படி அந்த யுத்தக்களனிடத்துக் கிடந்த பாதகனாகிய அந்த அபூஜகிலென்பவனிடத்திற் பண்போடும் போய்ச் சேர்ந்தார்கள்.