பக்கம் எண் :

சீறாப்புராணம்

1353


இரண்டாம் பாகம்
 

அழகானது சிறக்கப் பெற்ற வெற்றி மாலையைப் பூண்ட இரு தோள்களும் பூரிக்கும்படி பிரகாசியா  நிற்கும் ஒளிவையும் கூர்மையையுமுடைய வேலாயுதத்தைக் கையிலேந்திக் குதிரையின் மீது ஏறினார்கள். 

 

3695. குரிசினந் நபியைப் போற்றிப் பதின்மர்தங் கூட்ட நீங்கா

     விரைவுட னெழுந்து போந்து விலங்கலும் வனமு நீந்திக்

     கருதல னிருந்து வாழுங் கைபறென் றோது மூரின்

     புரிசையின் புறத்தி னுற்றார் வணிகரைப் போன்று மாதோ.

7

     (இ-ள்) அவ்வித மேறிய பெருமையிற் சிறந்தோரான அவ்வப்துல்லா றலியல்லாகு அன்கு அவர்கள் நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களைத் துதித்து அன்சாரீன்களாகிய அந்தப் பத்துப் பேர்களது கூட்டமும் நீங்காமல் வேகத்தோடு மெழும்பிச் சென்று மலைகளையுங்  காடுகளையுங் கடந்து சத்துராதியாகிய அந்த அபீறாபிகு இருந்து வாழுகின்ற கைபறென்று

சொல்லும் நகரத்தின் கோட்டையினது வெளியில் வியாபாரியைப் போன்று தங்கினார்கள்.

 

3696. புரிசையுள் ளுறைந்த பேர்க்கும் புறநகர் புகுது வோர்க்கும்

     வரன்முறை வேட்ட யாவும் வாணிபத் தொழிலின் மாறி

     யொருவரு முழையிற் புக்கி யுசாவுதற் கிடங்கொ டாம

     லிருளினும் பகலு நீங்கா திரண்டுநா ளிருந்து மாதோ.

8

      (இ-ள்) அவ்வாறு தங்கி அந்தக் கோட்டையி னுள்ளிருந்த ஜனங்களுக்கும், வெளியூர்களுக்குப் போய்ச் சேரப்பட்ட ஜனங்களுக்கும் அவர்கள் விரும்பிய அனைத்தும் ஒழுங்காய் வியாபாரத் தொழிலைப் போற் கொடுத்து வாங்கி ஒருவருந் தங்களிடத்தில் நுழைந்து யாதொரு சங்கதியும் ஆராய்வதற்கு இடங்கொடாமல் அந்தகாரத்தைக் கொண்ட இராக்காலத்திலும் பகற்காலத்திலும் நீங்காமல் அவ்விடத்தில் இரண்டு நாளுறைந்து.

 

3697. மாசறப் பின்னர் மூன்றா நாளில்விண் மணிவில் வீழ்த்தி

     யோசைமேற் கடலிற் புக்கி யுலகமு மிருளுங் காலைக்

     காசறு மப்துல்லா வென் றோதிய களிறு காலிற்

     றூசியிற் றொறுவி னோடுங் கரந்துசூழ் புரிசை புக்கார்.

9

      (இ-ள்) பிற்பாடு மூன்றாந் தினத்தில் குற்றமறச் சூரியனானவன் தனது பிரகாசத்தை விழச் செய்து முழக்கத்தைக் கொண்ட மேற்பாற் சமுத்திரத்திற் போய்ச் சேர்ந்து இந்த உலகமும் இருட்டான சமயத்தில், களங்கமற்ற அப்துல்லா றலியல்லாகு அன்குவென்று கூறிய யானையானவர்கள் பாதங்களிற்றரித்த