பக்கம் எண் :

சீறாப்புராணம்

1359


இரண்டாம் பாகம்
 

3713. இருந்தவ ரெழுந்து வீழ்த்த திரையினை யீழ்த்துட் புக்கி

     யரிந்திடுங் கதிர்வெள் வாளை யங்கையிற் பூட்டி யன்னோன்

     றிருந்தவங் கவளுக் கோது மொழிவழி சென்று செந்நீர்

     சொரிந்திட வெறிந்து நின்றார் சூரர்க டிலத மன்னார்.

25

     (இ-ள்) அவ்வாறு உவகையுற்று இருந்தவர்களான வீரர்களுக்குத் திலகத்தை நிகர்த்த அந்த அப்துல்லா றலியல்லாகு அன்கு அவர்கள் எழும்பி வீழச் செய்த திரைச் சீலையைக் கையினாலிழுத்து அதனகம் நுழைந்து அறுக்கின்ற பிரகாசத்தைக் கொண்ட வெள்ளிய வாளாயுதத்தை அழகிய கையில் தாங்கி அந்த அபீறாபிகென்பவன் அவ்விடத்திலிருந்த அவனது மனைவிக்குச் செவ்வைப்படும் வண்ணங் கூறிய அவ் வார்த்தைப் பிரகாரம் போய் இரத்தமானது சிந்தும்படி வீசினார்கள்.

 

3714. ஊறுபட் டெழுந்து வாய்விண் டுரப்பியாங் கரித்திவ் வில்லின்

     வேறுபட் டெவரோ கொன்றா ரென்னவாய் வெருவிக் கூவ

     வேறுபட் டவரியார் கொன்றா ரெவரென விடைந்து மாந்தர்

     தேறுபட் டிலராய் மாழ்கி மனையிடஞ் செறிந்தார் மன்னோ.

26

      (இ-ள்) அவ்வாறு வீச, அந்த அபீறாபிகென்பவன் காயப்பட்டு எழும்பித் தனது வாயைத் திறந்து அதட்டி ஆங்கரித்து இந்த வீட்டின் கண் யாரோ? அன்னியரிருந்து என்னைக் கொலை செய்தாரென்று அயர்ச்சியால் வாய்குளறிச் சத்தமிட, ஜனங்கள் இங்கு அன்னியர் யார்? கொலை செய்தவர் எவர்? என்று தெளியாதவர்களாக இடைந்து மயங்கி அவ் வீட்டின்கண் வந்து நெருங்கினார்கள்.

 

3715. எறிந்தொளித் திருந்தோர் காயஞ் சிறிதென மனத்தி னெண்ணி

     யுறைந்துசா வுவர்போ லாங்கி னுற்றுவா ளோங்கிப் பின்னுங் 

     குறைந்துயிர் மீளத் தாக்கிக் கூரிருட் காலை கூண்டு

     நிறைந்தவ ருடனு நின்று பயப்பய நீங்கி னாரால்.

27

      (இ-ள்) அவ்வாறு நெருங்க, வாளினால் வீசிவிட்டு மறைந்திருந்த அந்த அப்துல்லா றலியல்லாகு அன்கு அவர்கள் தங்களது இதயத்தினிடத்துக் காயஞ் சிறிதென்று நினைத்து அங்கிருந்து ஆராய்வோர்களைப் போன்று அவ்விடத்திற் சென்று மறுத்துந் தங்களது வாளாயுதத்தை யோங்கி அவனது ஆவியானது கெட்டு மீளும் வண்ணம் வெட்டி மிகுத்த இருட்டையுடைய அச்சமயத்தில் அங்கே திரண்டு நிறைந்த ஜனங்களோடும் நின்று மெல்ல மெல்ல அவ்விடத்தை விட்டு மகன்றார்கள்.