பக்கம் எண் :

சீறாப்புராணம்

1381


இரண்டாம் பாகம்
 

3769. வடுவுந் தீமையுந் தந்தையர் பழிகொளா வழுவு

     நடுவில் செய்கையுந் தேயங்க ணகைத்திடு நகையு

     முடிவி றுன்பமு முனையறும் பேடியென் பதுவு

     மிடுநி லத்தினி லெனக்கலாற் பிறரவர்க் கிலையால்.

10

     (இ-ள்) அன்றியும், பலவிதப் பயிர்களை யிடுகின்ற இப்பூமியின் கண் வசையும், தீமையும், பிதாவினது பழிக்குப் பதில் பழி வாங்காத குற்றமும், நியாயமற்ற செய்கைகளும் நகரங்களிலுள்ள யாவர்களும் நிந்திக்கின்ற நிந்திப்பும், முடிவற்ற துக்கமும், துணிவற்ற ஆணும் பெண்ணுமில்லாத அலியென்று சொல்லுவதும் எனக்கல்லாமல் அன்னியர்க்கில்லை.

 

3770. பிறங்க லுமவன் பெயரெனிற் பிதிர்த்துவிட் டெறிவன்

     கறங்க வாரிதியாயினு மவன் பெயர் கழறி

     னிறங்கெ டுத்தள றாக்குவ னேரல ருயிருண்

     டுறங்குஞ் செங்கதி ரயிலெடுத் தெந்திய வுரவோய்.

11

      (இ-ள்) ஆதலால் சத்துராதிகளின் ஆவியை யருத்தி நித்திரை செய்கின்ற சிவந்த பிரகாசத்தையுடைய வேலாயுதத்தைக் கையினாலெடுத்துத் தாங்கிய அறிவைக் கொண்ட அபாசுபியானே! மலைகளும் அந்த  முகம்மதென்பவனது பெயரென்றால் அவைகளைப் பிதிர்த்து விட்டு வீசுவேன்.  அவன் நாமத்தைச் சொன்னால் ஒலிக்கின்ற சமுத்திரமானாலும் அதன் ஒளிவை யில்லாமற் செய்து சேறாகப் பண்ணுவேன்.

 

3771. இன்று பற்பல வீரத்தின் வாய்க்கொளா தெடுத்து

     மன்று ளோர்செவிக் கின்புற மாற்றங்கள் வழங்க

     னன்ற தன்றுதீ னெனுமவர் நாமங்க டொலைக்கு

     மன்று கண்டறி சமர்த்திற மெனவெடுத் தறைந்தான்.

12

      (இ-ள்) இன்றையத் தினம் வீரத்தினால் வாய்கொள்ளாத பலபல பேச்சுகளை எடுத்து இந்தச் சபையின்கண் ணுள்ளவர்களது காதுகளுக்கு இனிமையுறும் வண்ணஞ் சொல்லுவது நல்லதல்ல, தீனுல் இஸ்லாமென்று சொல்லும் அவர்களது பேர்களை அழிக்கின்ற அன்றையத் தினம் எனது போரினது வல்லமையைப் பார்த்துணரென்று எடுத்துச் சொன்னான்

 

3772. கொடிய வஞ்சக னபூசகல் சேயிவை கூற

     மடிவில் சிந்தைய பாசுபி  யானுள மகிழ்ந்து

     முடிவு கண்டனன் தீனவர் தமக்கென மொழியத்

     திடவ யப்பரி கலபருள் புதல்வன்செப் புவனால்.

13

      (இ-ள்) பொல்லாங்கைக் கொண்ட வஞ்சகத்தை யுடையவனான அந்த அபூஜகி லென்பவனது புத்திரனாகிய