பக்கம் எண் :

சீறாப்புராணம்

1382


இரண்டாம் பாகம்
 

இக்கிரிமாவென்பவன் இந்தச் சமாச்சாரங்களைச் சொல்ல, சோம்புதலற்ற மனத்தையுடைய அபாசுபியானென்பவன் தனது இதயமானது களிப்படையப் பெற்றுத் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தையுடைய நமது சத்துராதிகளுக்கு இன்றையத் தினமே இறுதியை யான் கண்டேனென்று சொல்ல, வலிமையைக் கொண்ட வெற்றியையுற்ற குதிரையையுடைய கலபென்பவன் இவ்வுலகத்தில் தந்த புத்திரனான உபையென்பவன் சொல்லுவான்.

 

3773. வாட்டி றத்தினும் வீரத்தின் வலியினு மதியா

      தாட்டி றத்தினு மெடுத்தெடுத் தறைந்ததே யன்றி

      யீட்டும் வஞ்சக முகம்மதின் மாயங்க ளெதிர்ந்து

      கூட்டு நம்படை யுடைக்குமென் பதுகுறித் திலிரால்.

14

     (இ-ள்) நீங்கள் வாளினது வல்லமையினாலும், வீரத்தினது வல்லமையினாலும், காலாட்களினது வல்லமையினாலும், மதிக்காமல் இச்சமாச்சாரங்களை எடுத்து எடுத்துச் சொன்னதே யல்லாமல் வஞ்சகத்தைத் தேடிய அந்த முகம்மதென்பவனது மாயச் செய்கைகள் எதிர்த்துத் திரட்டிய நமது சேனையைத் தகரச் செய்யுமென்பதைக் கருதினீர்க ளில்லை.

 

3774. வினைய வஞ்சகன் முகம்மது விளைத்திடு மாயந்

      தனைய ழித்திட வல்லவர் தமைச்சவ தரித்து

      நனிகொள் வெம்படைக் குழுவொடும் பேரமர் நடத்த

      நினைவு வைத்திட வேண்டுமென் றுரைநிகழ்த் தினனால்.

15

      (இ-ள்) ஆதலால் கபடத்தைக் கொண்ட மாயத்தை யுடையவனான அந்த முகம்மதென்பவன் செய்திடும் வஞ்சத் தொழிலை இல்லாமற் செய்யச் சாமர்த்தியமுடையவர்களை நாம் சம்பாதித்து நெருக்கத்தைக் கொண்ட வெவ்விய நமது சேனைக் கூட்டத்தோடும் பெரிய யுத்தத்தை நடத்துவதற்கு எண்ணம் வைத்திட வேண்டுமென்று கூறினான்.

 

3775. கறுபு புத்திரன் கழறிய மாற்றமுங் கடிதின்

      முறுகி வெஞ்சினத் தபூசகல் மகன்மொழிந் ததுவு

      முறும மர்ப்புலி கலபரு ளுபையுரைத் ததுவும்

      பொறைம னத்துணர்ந் தியைபுற காலிது புகல்வான்.

16

     (இ-ள்) அவன் அவ்வாறு கூற, கறுபென்பவனது புதல்வனான அந்த அபாசுபியானென்பவன் சொல்லிய சங்கதிகளையும் விரைவில் திருகி வெவ்விய  கோபத்தையுடைய அபூஜகிலென்பவனது புத்திரன் இக்கிரிமாவென்பவன் சொல்லிய சங்கதிகளையும், மிகுந்த யுத்தத்திற்குப் புலியை நிகர்த்த