|
இரண்டாம் பாகம்
(இ-ள்) அவ்வாறு
கொடுக்க, ஒலீதென்பவன் இவ்வுலகத்தின் கண் தந்த பெருமையிற் சிறந்தோனான காலிதென்பவன்
நெருங்கிய தனது நேசர்களோடும் அபஷியிராச்சியத்திற்போய் அரிய திரவியத்தைக் கொடுத்து வலிமையில்
ஒப்பில்லையென்று சொல்லும் வண்ணம் மிகுத்த யுத்தவீரர்களைத் தெரிந்து துவளுகின்ற வேல் முதலிய
ஆயுதங்களோடும் மிகவாகச் சேகரம் பண்ணினான்.
3783.
அடரும் வெஞ்சம ரிடத்தினி லடித்துணை பெயரா
மிடலு டைத்திற லபசிவெம் படையொடும் விளைந்த
கடக யத்தட லினர்கனா னத்தெனுங் கூட்டப்
படையொ டும்புறப் பட்டனன் காலிதென் பவனே.
24
(இ-ள்) காலிதென்பவன்
அவ்வாறு சேகரம் பண்ணிப் பொருதுகின்ற வெவ்விய யுத்தக்களத்தி னிடத்துவைத்த இருபாதங்களையும்
பெயர்த்துப் பின் செல்லாத வல்லமையையுடைய தைரியத்தைக் கொண்ட வெவ்விய ஹபஷிச்சேனையோடும்,
முற்றிய மதத்தைப் பொருந்திய யானையை நிகர்த்த வலிமையை யுடையவர்களான கனானத்தென்று
சொல்லுங் கூட்டத்தினது சேனையோடும் புறப்பட்டான்.
3784.
வீர மிக்கக னானத்துக் கூட்டவெம் படையுங்
கார்நி றத்தப சிப்பெரும் படையுடன் கலப்பக்
கோர வாம்பரி யொலீ துசெய் தவத்துறுங் குரிசின்
மாரி யம்பொழின் மக்கமா நகரினில் வந்தான்.
25
(இ-ள்) கொடுமையைக்
கொண்ட பாயா நிற்குங் குதிரையையுடைய ஒலீதென்பவன் செய்த தவத்தினால் இவ்வுலகத்தின்கண்
அவதரித்து வந்த பெருமையிற் சிறந்தோனான காலிதென்பவன் அவ்வாறு புறப்பட்டு வீரத்தினால் மேன்மைப்பட்ட
கனானத்தென்னுங் கூட்டத்தினது வெவ்விய சேனையும், கரிய நிறத்தையுடைய பெரிய அபஷிச் சேனையுடன்
கலக்கும் வண்ணம் மேகத்தைக் கொண்ட அழகிய
சோலைகளையுடைய திருமக்கமா நகரத்தின்கண் வந்து சேர்ந்தான்.
3785.
காலி தென்பவன் பெரும்படை யுடன்வரக் களித்துச்
சூலின் வானமின் னெனுங்கதிர் வேலபா சுபியான்
பாலிற் சூழ்தரு பாடியிற் பெரும்படை திரட்டிக்
கோல மார்குர கதத்தொடுங் கூட்டமிட்ட னனால்.
26
(இ-ள்) அந்தக்
காலிதென்பவன் அவ்வாறு பெரிய சேனைகளுடன் வரவும், மழையினது கருப்பத்தைப் பொருந்திய
|