|
இரண்டாம் பாகம்
3789.
சீற்றங் கூண்டுருக் கொண்டெனத் தோன்றிய திறலோர்
சாற்றொ ணாத்தரு கண்மையு மறனுமே தரித்தோ
ரூற்ற மிக்கவெவ் வரியினும் வலிமைய ருணர்வின்
மாற்ற மென்பது செவிப்புறந் தனினும்வைத் தறியார்.
30
(இ-ள்) கோபமே ஒன்று
சேர்ந்து ஓர் வடித்தை எடுத்தாற் போலும் இவ்வுலகத்தின்கண் அவதரித்து வந்த வலிமையையுடையவர்களும்,
சொல்லுதற்கு முடியாக அஞ்சாமையையும் கொலைத் தொழிலையும் பூண்டவர்களும், வலிமை மிகுத்த வெவ்விய
சிங்கத்தைப் பார்க்கிலும் வலிமையையுடையவர்களும், அறிவைக் கொண்ட சமாச்சாரமென்று சொல்லப்பட்டதைக்
காதுகளின் பக்கத்திலும் வைத்துத் தெரியாதவர்களுமான.
3790.
இனைய தன்மையர் அபசிகள் குலத்தவ ரிதயத்
துனிவி லாதுமூ வாயிரம் பெயரவர் சூழக்
குனிசி லைக்கைக னானத்தென் பவர்பல குழும்பப்
புனையும் வெற்றிகொண் டெழுந்தன னொலீதுதன் புதல்வன்.
31
(இ-ள்) இப்படிப்பட்ட
தன்மையர்களான அபஷிகளது கூட்டத்தினர் மனப்பயமின்றி மூவாயிரம் பேர்கள் சூழவும், வளைக்கின்ற
கோதண்டத்தைத் தாங்கிய கையையுடைய அனேகக் கனானத்தென்று சொல்லப்பட்டவர்கள் கூடவும்,
ஒலீதென்பவனது புத்திரனான காலிதென்பவன் சூடா நிற்கும் விஜயத்தைப் பெற்றெழும்பினான்.
3791.
அடவி யிற்படை புறநகர்ப் படையவ னுறவி
னுடையர் மிக்கொடு வரும்படை பகையினி லுடைந்தோர்
படைப டைக்கலத் தொடுநெருங் கிடப்பரி செறியக்
குடைக வித்திட வெழுந்தனன் கறுபுதன் குமரன்.
32
(இ-ள்) அவன் அவ்வாறெழும்ப,
கறுபுடைய புதல்வனான அபாசுபியானென்பவன் அடவியிலுள்ள சேனைகளும், அன்னிய ஊர்களிலுள்ள சேனைகளும்,
மிகுதியாக வந்த அவனது சுற்றத்தார்களது சேனைகளும், அந்தப் பதுறென்னும் யுத்தத்தில் மாண்டவர்களது
சேனைகளும், யுத்தாயுதங்களோடு செறியவும், குதிரைகள் மிடையவும், குடைகள் கவிக்கவு மெழும்பினான்.
3792.
மக்க மாநகர்க் குறைசிமன் னவர்களும் படையு
மொக்க லுமுயிர்த் துணைவரு முறுமகப் படையு
மிக்க பேரற பிக்குலக் காபிரு முடையத்
தக்க வன்மனத் தெழுந்தன னபூசகல் தனையன்.
33
|