பக்கம் எண் :

சீறாப்புராணம்

1391


இரண்டாம் பாகம்
 

3802. வாய்ந்த வெற்றிசற் றுண்டெனக் காட்டின வதன

     மேய்ந்த துற்குறி காட்டின வேந்தர்க னிடத்தோள்

     காய்ந்த வெஞ்சினங் காட்டின வீரர்கள் கடைக்கண்

     பாய்ந்து வெண்பணிச் சுமைபயங் காட்டின பரிகள்.

43

     (இ-ள்) அன்றியும், அந்தக் காபிர்களாகிய அரசர்களது முகங்கள் சிறந்த விஜயமானது கொஞ்சமுள்ளதென்று காட்டின. அவர்களது இடது புயங்கள் பொருந்திய அவக்குறியைக் காட்டின. அவ்வீரர்களது கடைக்கண்கள் காய்ந்த வெவ்விய கோபத்தைக் காட்டின. குதிரைகள் சாடி வெள்ளிய பணியினது பாரமாகிய அச்சத்தைக் காட்டின.

 

3803. ஆறு கொண்டென திகைவெளி யடங்கலு மரிதிற்

     சேறு கொண்டன வாசியின் வாய்நுரை சிதறி

     நீறு கொண்டன வரைகளு மடவியு நெருங்கி

     மாறு கொண்டவன் காபிர்தம் பெரும்படை வரலால்.

44

     (இ-ள்) அன்றியும், விரோதத்தைக் கொண்ட வலிமையையுடைய அந்தக் காபிர்களது பெரிய சேனையானது வருவதினால் அச்சேனையிலுள்ள குதிரைகளின் வாயின் நுரையானது சிந்தி எண்டிசைகளின் வெளிமுழுவதும் நதிகள் கொண்டதைப் போலும் அரிதிற் சேற்றைக் கொண்டன. மலைகளும் சோலைகளும் மிடைந்து புழுதியைக் கொண்டன.

 

3804. கணித மில்லெனத் தொகைபல வயிரங்கள் கலந்த

     பணியி மைத்தன வேந்தர்க டோட்பருப் பதத்தின்

     மணியி மைத்தன வாளயி லிமைத்தன மதித்த

     அணிவ குத்தெழும் படையினை நோக்குதற் கமைந்தே.

45

     (இ-ள்) அன்றியும், யாவராலும் மதிக்கப்படுகின்ற அணிகளாக வகுத்து எழும்பிய அந்தக் காபிர்களது சேனைகளைப் பார்ப்பதற்குப் பொருந்தி எண்ணிக்கை யில்லையென்று சொல்லும் வண்ணம் கூட்டமாகிய பல வயிரமணிகளைக் கலக்கப் பெற்ற ஆபரணங்கள் இமைத்தன. அரசர்களது புயங்களாகிய மலைகளில் தரித்த முத்துமாலைகள் இமைத்தன. அவர்களது அழகிய வாட்களும் வேல்களும் இமைத்தன.

 

3805. கொடியு மாலவட் டங்களும் விரிந்தவெண் குடையும்

     புடைப ரந்திட வெழுந்துகட் டூதினைப் போக்கி

     யடிகொள் பல்லிய முருமென வதிர்ந்திட வகன்ற

     படியு முள்விழ நடந்தது சேனையம் பரவை.

46

     (இ-ள்) அவ்வாறாக அந்தக் காபிர்களது சேனாசமுத்திரமானது கொடிகளும், ஆலவட்டங்களும், விரிந்த வெள்ளிய குடைகளும்,