பக்கம் எண் :

சீறாப்புராணம்

1448


இரண்டாம் பாகம்
 

றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களது தேக முழுவதிலும் இரத்தமானது சிந்தும் வண்ண மிறந்தார்களென்று யாவரும் பிரமிக்கும் வண்ணஞ் சத்தமிட்டான்.

 

3986. திக்க னைத்தினுந் தெரிதரக் கூவியுட் டெளியா

     தக்க நீர்தரக் கிடந்தைய கோவென வழன்று

     விக்கி வாய்குழ றிக்கொண்டு வயிற்றினை விரைவி

     னெக்கி யேங்கிநின் றழுதனன் புலம்பின னிரங்கி.

227

     (இ-ள்) எண்டிசைகளி லுள்ளவர்களுக்கு விளங்கும் வண்ணம் அவ்வாறு சத்தமிட்டு மனமானது தேறாமல் கண்கள் நீரைக் கொடுக்கும்படி பூமியிற் படுத்து ஐய கோ! என்று சொல்லிக் கோபித்து விக்கி வாயாற் குழறிக் கொண்டு வேகத்தில் வயிற்றை எக்கிப் பிதற்றி இரங்கி ஏங்கி நின்று அழுதான்.

 

3987. படியில் வீழ்ந்தெழுந் துடலெங்கு மடிக்கடி பதறிக்

     கொடிய வஞ்சகச் சூமன்வந் தழுதிவை கூற

     மடிவி லாமன தீனவ ரியாவரு மலைந்து

     விடிவ தென்னென வோடினர் முறிந்தனர் மிகவும்.

228

     (இ-ள்) கொடிய மாயத்தைக் கொண்ட சூமனான அவ்விபுலீசானவன் வந்து அடிக்கடி பூமியில் விழுந்து எழும்பிச் சரீரமெங்கும் நடுங்கப் பெற்று அழுது இந்தச் சமாச்சாரங்களைச் சொல்ல, சோம்புதலற்ற சிந்தையை யுடையவர்களான தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தைக் கொண்ட அசுஹாபிமார்க ளனைவரும் மிகவும் மயங்கி இனி நமக்கு அனுகூலமாவது யாது? ஒன்றுமில்லையென்று முறிந்தோடினார்கள்.

 

3988. முற்றுந் தீனவர் சூமன்றன் வாய்மையின் முறிய

     வுற்ற நன்னபி யபூபக்க ரடலும றதுமான்

     வெற்றி சேருமப் பாசமு சாமிசு அபுவு

     மற்று நாலைந்து மைந்தரு நின்றனர் மாதோ.

229

     (இ-ள்) அவ்வாறு தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தையுடைய அசுஹாபிமார்கள் சூமனாகிய அவ்விபுலீசினது வார்த்தையினால் முழுவதும் முறிந்தோட, அந்த யுத்தக்களத்தில் தங்கிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்லம், அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு, வலிமையைக் கொண்ட உமறுகத்தாபு றலியல்லாகு அன்கு, உதுமானிபுனு அப்பான் றலியல்லாகு அன்கு, விஜயத்தை பொருந்திய அப்பாசு றலியல்லாகு அன்கு, அம்சா றலியல்லாகு அன்கு, மிசுஹபு றலியல்லாகு அன்கு ஆகிய இவர்களும், இவர்களல்லாமல் இன்னும் நான்கு ஐந்து அசுஹாபிமார்களும் நின்றார்கள்.