இரண்டாம் பாகம்
(இ-ள்) அவ்வாறு
கொடுக்க, நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு
அலைகி வசல்ல மவர்கள் நீங்கள் தரித்த வஸ்திரங்களே யல்லாமல் மற்றப் பொருள்க ளியாவையு மெடுக்காமல்
தாங்கிய கையினிடத்துள்ள ஆயுதங்களை வீசிவிட்டுப் போகுங்க ளென்று சொன்னார்கள். அவ்வாறே
அவர்கள் யாவையும் விட்டுவிட்டுச் செல்ல, அந்நாயகம் நபிகட் பெருமானவர்கள் மிகவு மிரங்கி
ஐந்து ஒட்டகைகள் சுமக்கும்படியான நெல்லை மதித்துக் கொடுத்தார்கள்.
4136.
குற்றமுறு வன்னரகு சேர்கொடிய கஃபு
சுற்றமெனு மள்ளர்சிலர் சோபமொடு சாமி
னுற்றனர்கள் மற்றவ ரொருங்கொடு திரண்டு
வெற்றிபெறு கைபர்நகர் மேவினர்க ளன்றே.
14
(இ-ள்) அவ்வாறு
கொடுக்க, களங்கத்தைப் பொருந்திய கொடிய நரகலோகத்திற் போய்ச் சேர்ந்த குரூரத்தைக் கொண்ட
அந்தக் ககுபென்பவனது பந்துக்களென்று சொல்லுஞ் சில வீரர்களாகிய காபிர்கள் துயரத்தோடும்
ஷாமிராச்சியத்திற் போய்ச் சேர்ந்தார்கள். மற்ற காபிர்கள் ஒன்றாகக் கூடி விஜயத்தைப் பெற்ற
கைபறென்னும் பட்டினத்திற் போய்ச் சேர்ந்தார்கள்.
4137.
வாசிமணி தூசுபணி மாடைகுடை வானில்
வீசுகொடி சாமரைகை வேல்படைக ளெல்லா
நேசமுறு செல்வநிறை மன்னரைநி றுத்திப்
பாசமுறு பேதையர்கள் பாலினித ளித்தார்.
15
(இ-ள்) அவர்கள் அவ்வாறு
சேர, அங்குள்ள குதிரைகள் இரத்தினங்கள், வத்திரங்கள், ஆபரணங்கள், நிதிகள், கவிகைகள்,
ஆகாயத்தில் மோதுகின்ற கொடிகள், சாமரங்கள், கைவேல்கள், மற்ற ஆயுதங்களாகிய எல்லாவற்றையும்
நேசத்தைப் பொருந்திய செல்வமானது நிறையப் பெற்ற அரசர்களான சஹாபாக்களை நிற்கச் செய்து
இனிமையோடும் அன்பைப் பொருந்திய தரித்திரர்களிடத்திற் கொடுத்தார்கள்.
4138.
இஞ்சியினி ருந்தபொரு ளெட்டுணையு மின்றி
நெஞ்சின்மகிழ் வுற்றுமிடி யார்க்குதவி நேச
மிஞ்சுபய காம்பர்மற வேந்தர்படை சூழ
வஞ்சமற வேமதின மாநகரின் வந்தார்.
16
(இ-ள்) அன்பானது அதிகரிக்கப்
பெற்ற பயகாம்பரான நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா அஹ்மது முஜ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகி வசல்ல மவர்கள் அவ்வாறு
|