பக்கம் எண் :

சீறாப்புராணம்

1538


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்விதம் பார்த்த அவன் மனத்தின்கண் நல்லகாருண்ணிய மதிகரித்து வலிமையான தோங்கப் பெற்ற அந்த முஸ்லிம்களியாவரையுந் தாண்டிச் சந்திரனை நிகர்த்த நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் நித்திரை செய்கின்ற அந்தத் தானத்தில் வந்து மகிழ்ந்து இதயத்தின்கண் சிந்தித்தான்.

 

4224.  மின்றி றந்தவை வாள்கொடிவ் வீரனை

     யின்று கோறல் கருமமென் றெண்ணியே

     துன்ற ருங்குணத் தூதர்கை வாளினைச்

     சென்றெ டுத்தடற் செங்கையிற் சேர்த்தினான்.

47

     (இ-ள்) ஒளிவு விளங்கிய கூர்மை பொருந்திய இந்த வாளாயுதத்தைக் கொண்டு இந்த வீரனை இன்றையத் தினங்கொன்று விடுவது காரியமென்று அவ்வாறு சிந்தித்து நெருங்குதற் கருமையான குணத்தையுடைய றசூலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது கையினது வாளாயுதத்தைப் போய் எடுத்து நெருங்கிய செந்நிறத்தைக் கொண்ட தனது கையிற் பொருத்தினான்.

 

4225.  அக்க ணத்தி னருமறை யுட்கொளு

     மிக்க தூதர் விரைவின் விழித்தனர்

     புக்க வஞ்ச மனத்தன் பொருக்கென

     வுக்கி ரத்தோ டொருமொழி பேசுவான்.

48

     (இ-ள்) அவ்வாறு பொருத்த, அந்தச் சமயத்தில் அருமையான புறக்கானுல் மஜீதென்னும் வேதத்தை இதயத்தின்கண் கொண்ட மேலான றசூலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிகாத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் நித்திரையி லிருந்தும் வேகத்தில் விழித்தார்கள். வஞ்சகமானது நுழையப் பெற்ற இதயத்தை யுடையவனான அவன் பொருக்கென்று கோபத்தோடும் ஒரு வார்த்தை சொல்வான்.

 

4226.  மண்டு செம்புன லாடிய வாளுரீஇக்

     கொண்டு தீனர் குறைபட வேயிரு

     துண்ட மாக வுனைத்துணிப் பேனது

     கண்டி யாவர் விலக்குவர் காணென்றான்.

49

     (இ-ள்) நெருங்கிய இரத்தத்திற் குளித்த இந்த வாளாயுதத்தை யுருவிக் கொண்டு தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தை