பக்கம் எண் :

சீறாப்புராணம்

1541


இரண்டாம் பாகம்
 

ஆண்டவனுக்காக மன்னிக்க வேண்டுமென்று சொல்லி அவர்களது திருவடிகளிற் சாஷ்டாங்கஞ் செய்தான்.

 

4234.  வீ்ழ்ந்து நின்ற அறபி வெருவற

     வாழ்ந்த கேள்வி யகும திருத்திமுன்

     சூழ்ந்த வாய்மைத் துணைவரைக் கூவியே

     தாழ்ந்த செய்கையன் செய்வகை சாற்றினார்.

57

     (இ-ள்) அவ்வாறு சாஷ்டாங்கஞ் செய்து நின்ற அந்த அறபிக்காபிரானவனை வாழ்ந்த கேள்விகளையுடைய அஹ்மதென்னுந் திருநாமத்தைக் கொண்ட நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் பயமறும் வண்ணம் முன்னால் இருக்கும்படி செய்து தங்களை வளைந்த சத்தியத்தைக் கொண்ட நேசர்களான அசுஹாபிமார்களைக் கூப்பிட்டு இழிந்த செய்கையை யுடையவனான அந்த அறபிக் காபிர் செய்த விதத்தைச் சொன்னார்கள்.

 

4235.  வனைக ழற்கழன் மைந்தர்க ளியாவருந்

     துனிகொண் மாற்றஞ் செவியுறத் துன்னலார்

     வினைய முற்று விடுப்பவந் தோனென

     வினைய மாற்ற மெடுத்தெதிர் கூறுவார்.

58

      (இ-ள்) அலங்கரிக்கப்பட்ட வீரக்கழலைத் தரித்த பாதங்களையுடைய காளையர்களாகிய அந்த அசுஹாபிமார்க ளனைவரும் அவர்கள் அவ்வாறு சொல்லிய துன்பத்தைக் கொண்ட சமாச்சாரமானது காதுகளிற் பொருந்த இவன் சத்துராதிகளாகிய காபிர்கள் வஞ்சகமுற்று அனுப்ப வந்தவனென்று இத்தன்மையான சமாச்சாரங்களை எடுத்துப்பதிற் சொல்லுவார்கள்.

 

4236.  பாதம் பற்றிய கஃபெனும் பாவியா

     னேத முற்று மிளைத்தது மெண்ணிலா

     நீத மற்றபி றாபிசெய் நிந்தையும்

     பூத லத்துண் மறந்தனிர் போலுமே.

59

      (இ-ள்) திருவடிகளைப் பிடிக்க கஃகுபென்று சொல்லும் பாதகன் முழுவதுங் குற்றத்தையே செய்ததையும், அபீறாபிகென்பவன் கருதாமல் நீதமற்றுச் செய்த நிந்தையையும், நீங்கள் இந்தப் பூமியினிடத்து மறந்தீர்கள் போலும்.

 

4237.  கடமு டைத்தெழு கைம்மலை மாவையுள்

     விடமி குத்த பணியைமின் னாரினைப்

     படிறி ழைத்த பகைஞரைக் கொற்றவ

     திடனு றப்புவி தேற முடியுமோ.

60