பக்கம் எண் :

சீறாப்புராணம்

1544


இரண்டாம் பாகம்
 

4245.  மிஞ்சு தின்மைசெய் மேலவர் கையுறி

     னஞ்செ னத்தெற லின்பமந் நாளரோ

     அஞ்ச லென்றப யங்கொடுத் தாலுயிர்

     துஞ்சி னும்புகழ் வைகலுந் துஞ்சுமால்.

68

     (இ-ள்) அன்றியும், ஓங்கா நிற்குந் தீமைகளை யியற்றுகின்ற சத்துராதிகள் கையிலகப்பட்டால் அவர்களை நஞ்சைப் போலும் பொருதிக் கொல்லுகின்ற மகிழ்ச்சியானது கொன்ற அந்த நாள் வரை தானிருக்கும். அவர்களை நீங்கள் பயப்படாதீர்களென்று சொல்லி அவர்களுக்கு அடைக்கலங் கொடுத்தால் அதனாலுண்டாகுங் கீர்த்தியானது நமது பிராணன் இறந்து போனாலும் இறந்து போகாமற் பிரதி தினமும் நிலையாக நிற்கும்.

 

4246.  அன்பி னுக்கொரு வேலி யவமெனுந்

     துன்பி னுக்கருந் தூய மருந்துமீ

     றின்ப முற்றுற வீண்டிய மெய்த்தவம்

     வன்ப கற்றிய வாள்பொறை மாட்சியே.

69

     (இ-ள்) அன்றியும், கொடுமையை இல்லாமற் செய்கின்ற வாளாயுதத்தின் பொறுமையினது பெருமையானது தயவிற்கு ஒப்பற்ற வேலியாகும். வீணென்று சொல்லுகின்ற துக்கங்களுக்கு அருமையானப் பரிசுத்தத்தைக் கொண்ட மருந்தாகும். ஓங்கா நிற்கும் மகிழ்ச்சியானது முழுவதும் பொருந்தும் வண்ணம் நெருங்கிய உண்மைத் தவமாகும்.

 

4247. கல்வி யாசறக் கற்றுணர்ந் தீகைசேர்

     செல்வ மீறு சிறப்புடை யோரிடஞ்

     சொல்லு நீர்மைப் பொறையெனுந் தூய்மையொன்

     றில்லை யேலுற் றெழும்புகழ் வீயுமால்.

70

     (இ-ள்) அன்றியும், குற்றமறக் கல்விகளைக் கற்றுத் தேர்ந்து ஈகை பொருந்திய செல்வமானது ஓங்கப் பெற்ற மேன்மை யுடையோர்க ளிடமும் புகழா நிற்குந் தன்மையைக் கொண்ட பொறுமையென்று சொல்லும் பரிசுத்தமான தொன்றில்லையே யாயின் மிகுத்து ஓங்கா நிற்கும் அவர்களது கீர்த்திகளும் கெட்டுப் போகும்.

 

4248.  புன்றொ ழிற்கொலை வித்தை பொருந்திய

     வன்றி றத்து மனத்தவர் மெய்யுளங்

     குன்றி நிற்பக் குறைகள் பொறுத்தநன்

     னன்ற ளிக்கி னசைபெரி தாகுமால்.

71

      (இ-ள்) அன்றியும், கீழ்மையான செய்கையாகிய கொலை வித்தை சார்ந்த பெருமை பொருந்திய வன்மையைக் கொண்ட