பக்கம் எண் :

சீறாப்புராணம்

1582


இரண்டாம் பாகம்
 

மலையானவர்களே! என்று சொல்லிப் புகழ்ந்து சில வார்த்தைகளைக் கூறுவாள்.

 

4344. தவமும்பெறு நிறையும்வெகு தயவுங்கன தனமுங்

     கவினும்பொறை யருளுமது கையுநாளினு முடையோன்

     புவியும்புகழ் தரவல்லவன் பொருவில்லவ னாரி

     தவனில்லவள் பெறும்பந்தனை யடியாள்சுவை றாவே.

50

     (இ-ள்) பிரதி தினமும் தவமும் பெறா நிற்கும் மாட்சிமையும் மிகுத்த தயவும் அதிக திரவியமும் அழகும் பொறுமையும் அருளும் வெற்றியுமுடையவனும் இப்பூலோகமும் புகழும்படியுள்ள வல்லவனும் ஒப்பற்றவனும் ஆரிதென்னும் பெயரையுடையவனுமான அவனது மனைவியானவ ளீன்ற புதல்வியாகிய அடியாள் சுவைறா வென்னும் பெயரையுடைய யான்.

 

4345. தீனோர்களில் தாபித்தெனுந் திறன்மன்னவர் சார்பி

     லானேன்றலை விலையீந்தினி நீபோகென வறைந்தார்

     வானூர்மதி யனையீர்மன மகிழ்ந்தேகயி றாக

     யானேயிவ ணடைந்தேன்சில பொருளீகுமி னையா.

51

     (இ-ள்) ஆகாயத்தின் கண்ணூர்ந்து திரியுஞ் சந்திரனுக் கொப்பான நபிகட் பெருமானே! யான் தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தையுடையார்களில் தாபித்தென்று சொல்லும் வலிமையைக் கொண்ட அரசரது பக்கத்தி லாயினேன். அவர்கள் என்னை இனிநீ முதன்மையான விலையைக் கொடுத்து விட்டு உன்னிடத்திற்குச் செல்லு வாயாக வென்று சொன்னார்கள். ஆதலால் யான் உள்ளமானது மகிழ்ச்சியடையப் பெற்றுக் கயிறாக இங்கு வந்து சேர்ந்தேன். அதற்காகத் தாங்கள் கொஞ்சந் திரவியங் கொடுங்கள்.

 

4346. செயிரற்றெனை யீன்றாள்பிரி வென்னுங்கொடுந் தீயால்

     வெயில்பட்டிடு மலரொத்தற் மெலிவாளுள மதனா

     லயர்வுற்றன னவணேகுவ னெழில்வானவ ரவரி

     னுயர்மெய்த்தவ முடையீரரு ளிரங்கீரென வுரைத்தாள்

52

     (இ-ள்) அழகிய தேவர்களான மலாயிக்கத்து மார்களிலு முயர்வான உண்மையைக் கொண்ட தவத்தையுடைய நபிகட் பெருமானே! களங்கமின்றி என்னைப் பெற்ற தாயானவள் பிரிவென்று சொல்லுங் கொடிய நெருப்பினால் சூரிய வெப்பத்திலகப்பட்ட புஷ்பத்தை நிகர்த்து மனமானது மிகவும் வாடப் பெறுவாள். அதனால் வருத்தமடைந்த யான் அங்குச் செல்லுவேன். அதற்காகத் தாங்கள் கருணை புரிவீர்க ளாகவென்று சொன்னாள்.