பக்கம் எண் :

சீறாப்புராணம்

1589


இரண்டாம் பாகம்
 

     (இ-ள்) அவ்வாறிருந்த கொடிய கடுமையான இதயத்தை யுடைய அந்தக் குயையென்பவன் தனது குடும்பத்திற்குச் சொந்தமான ஆடவர்களும், தனது மார்க்க வொழுங்கில் நின்ற அரசர்களும், அவர்களோ டுறைந்த ஆலோசனை சொல்லுவதில் வல்லவர்களான மந்திரிமார்களும், யுத்தத் தொழிலையுடைய தலைவர்களும், தவிராமல் எவ்விடத்திலுங் கபடத்தை ஏவிவிடுகின்ற எகூதிகளுமாகிய இவர்களைப் பார்த்து இவ்விதமான சமாச்சாரங்களை விரித்துச் சொல்ல ஆரம்பித்தான்.

 

4362. தாரணி யதனில் வேறு பொருவிலா சுகுறா வென்னு

     மூரிடை யிருந்து வாழ்ந்தா முகம்மதென் றொருவன் றோன்றி

     வீரமுந் திறனும் வாய்ந்த ககுபையும் வதைத்து வீழ்த்திச்

     சீரிலா நமரை யும்மிப் புறநகர் திரிய விட்டான்.

7

     (இ-ள்) நாங்கள் இப்பூமியின்கண் வேறு ஒப்பில்லாத சுகுறாவென்று சொல்லும் நகரத்தின் கண் இருந்து வாழ்ந்தோம். முகம்மதென்று சொல்லி ஒருவன் இவ்வுலகத்தின் கண் அவதரித்து வீரியமும் வலிமையுஞ் சிறக்கப் பெற்ற ககுபென்பவனையுஞ் கொன்று பூமியின் கண் விழச் செய்து நம்மவர்களையுஞ் சிறப்பின்றி இந்த அன்னிய தேசங்களிற் செல்லும்படி அனுப்பினான்.

 

4363. புதியதோர் சமயம் பூண்ட திருந்தலர் போரிற் றாக்கிக்

     கதமுடைத் திறனுங் காட்டி வெற்றியே காண வேண்டு

     மதிவலீ ரீதன் றென்னில் வாழுயிர் துறப்ப தல்லா

     லிதமுற விருத்த னந்தம் விறலினுக் கிழிவ தாமால்.

8

     (இ-ள்) புத்தியினால் வலிமை யுடையவர்களே! நூதனமாகிய ஒரு மார்க்கத்தைக் கொண்ட சத்துராதிகளாகிய அவர்களை நாம் யுத்தத்தி லெதிர்த்து நமது உக்கிரத்தைக் கொண்ட வல்லமையையு மவர்களுக்குத் தெரிவித்து விஜயத்தைப் பெற வேண்டும். இஃதல்ல வென்றால் வாழா நிற்கும் நமது பிராணனை விடுவதல்லாது இனிமை பொருந்தும் வண்ணம் வாழ்ந்திருப்பது நம்முடைய பெருமைக்கு இழிவாகும்.

 

4364. நாட்டினைத் துறந்து சார்ந்த நாணமுந் துறந்து வாழ்ந்த

     வீட்டினைத் துறந்து வீர வேடமுந் துறந்து கேளிர்

     கூட்டமுந் துறந்தி யாரு மவமொழி கூறும் புன்மைச்

     சூட்டையொன் றெடுத்தாம் நம்மைப் போலெவர் துணிய வல்லார்.

9

     (இ-ள்) அன்றியும், நாம் நமது தேசத்தையும் நீத்துப் பொருந்திய வெட்கத்தையும் நீத்து வசித்த வீட்டையும் நீத்து