பக்கம் எண் :

சீறாப்புராணம்

1675


இரண்டாம் பாகம்
 

பெருமானே! அத்தன்மையான வெவ்விய கூந்தலானது வந்து பொருந்த எனது சரீரத்தின் நடுக்கமானது இன்னமுந் தீர்ந்திலது. எளியேனாகிய யான் உங்களது பறக்கத்தினால் நிலைபெற்ற எனது உயிரைக் கொண்டு இங்கு வந்து சேர்ந்தேன். அவ்வாறு வருவதற்கு உங்கள் பறக்கத்தல்லாமல் வேறு யாதாவது உளதா? ஒன்றுமில்லை.

 

4615. ஆடல் வாசகங் கேட்டலு மும்பர்க்கு மரசர்

     சேடு கொண்டமேற் போர்வையைத் திருக்கரத் தெடுத்து

     மூடி னார்குளிர் கலக்கமு நடுக்கமு முழுது

     மோடிப் போயின வுவந்தனர் களித்தன ருளத்தில்.

177

     (இ-ள்) அவ்வாறு அவர்கள் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டளவில், தேவர்களான மலாயிக்கத்து மார்களுக்கும் வேந்தரான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அழகைக் கொண்ட தங்கள் சரீரத்தின் கண் கிடந்த போர்வையைத் தங்களது தெய்வீகந் தங்கிய கைகளினா லெடுத்து அந்தக் குதைபா றலியல்லாகு அன்கு அவர்களது சரீரத்தின் கண் போர்த்தினார்கள். அதனால் அவர்களது சரீரத்தின் கண்ணுள்ள கூதலினது கலக்கமும் நடுக்கமும் முழுவதும் ஓடிப் போயின. அவர்கள் மனதின் கண் விருப்பமுற்று மகிழ்ச்சி யடைந்தார்கள்.

 

4616. உள்ளங் கூர்தர மாற்றலர் முனைப்பதி யெவருங்

     கொள்ளை கொள்ளுமு னியான்கொளு வேனெனக் குறித்துத்

     தெள்ளும் வெங்கதிர்க் கரத்தினை நீட்டியே சிறப்ப

     வெள்ளி வெண்டிரை முகட்டிடை யெழுந்தனன் வெய்யோன்.

178

     (இ-ள்) அவர்கள் அவ்வாறு மகிழ்ச்சி யடைய, சூரியன் யாவரும் மனமானது சந்தோஷிக்கும்படிச் சத்துராதிகளாகிய காபிர்களது பாசறையைக் கொள்ளை கொள்ளுவதற்கு முன்னர் யான் கொள்ளுவேனென்று மதித்துத் தெள்ளிய வெவ்விய தனது கிரணங்களாகிய கைகளை நீட்டிச் சிறக்கும் வண்ணம் வெள்ளியினது நிறத்தை யொத்த வெள்ளிய நிறத்தைக் கொண்ட அலைகளை யுடைய சமுத்திரத்தின் உச்சியி லெழும்பினான்.

 

4617. மித்தி ரன்குட திசையெழ கறுபருள் வீர

     னுத்த ரஞ்சொலா தேகின னியாவரு முளைய

     வித்தி றத்தினை யறிந்தகுத் தபுமக னென்போன்

     சித்தி ரத்தையொத் திருந்தனன் சலித்தனன் றிகைத்தான்.

179