பக்கம் எண் :

சீறாப்புராணம்

1676


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு சூரியனானவன் கீழ்த்திசையி லுதயமாக ஹறுபென்பவன் இவ்வுலகத்தின்கண் தந்த வீரனான அபாசுபியா னென்பவன் யாவர்களும் மனம் வருந்தும் வண்ணம் விடை சொல்லாமற் சென்றான். இந் நிலைமையை அகுத் தென்பவனது புத்திர னென்று சொல்லுங் குயை யென்பவன் தெரிந்து சித்திரப் பாவையைப் போன்றிருந்து வருந்தி மயக்கமுற்றான்.

 

4618. நயநு கைமுசொல் சொற்படி முகம்மதி னளினக்

     கயில்வெஞ் சூதுட னெனையொப்புக் கொடுத்தனன் காணென்

     றயின்ம றந்துமற் றரசரும் விட்டுவிட் டாக்கை

     யுயிரி னைப்பிழைத் திவனும்பின் னோடின னூர்க்கே.

180

     (இ-ள்) அவ்வாறு மயக்கமுற்று நன்மையை யுடையவனான அந்த நுகைமுவென்பவன் சொல்லிய வாசகப்படி என்னை அந்த முகம்மதென்பவனது தாமரை மலரை நிகர்த்த கைகளில் வெவ்விய வஞ்சகத்தோடும் ஒப்புவித்தா னென்று சொல்லித் தனது கைவேலையு மறந்து மற்ற வேந்தர்களையும் அங்கே விட்டு விட்டுத் தனது சரீரத்தையும் பிராணனையுந் தப்பிக் கொண்டு அந்த அபாசுபியா னென்பவனுக்குப் பின்னாக இந்தக் குயையென்பவனும் தன் நகரத்திற்கு ஓடிப் போனான்.

 

4619. கங்கு தப்பிய கத்துபான் குழுவுங்க னானாச்

     சங்க மும்பெரும் படைக்கட லசத்தெனுஞ் சவையும்

     பங்க மெய்திடும் பனீகுறை லாவெனும் படையு

     மங்கி ருந்தில சிதறின வோடின வன்றே.

181

     (இ-ள்) அவன் அவ்வாறு போக, எல்லை தவறிய கத்துபானென்னுங் கூட்டமும், கனானாக் கூட்டமும், பெரிய சேனா சமுத்திரமாகிய அசத்தென்று சொல்லுங் கூட்டமும், பாவத்தைப் பொருந்திய கொலைத் தொழிலைச் செய்கின்ற பனீக்குறைலா வென்னுங் கூட்டமும் அவ்விடத்தி லிராமல் நாற்றிசைகளிலுஞ் சிதறலுற்று ஓடிச் சென்றன.

 

4620. இனைய மன்னர்நா ளிருபதுஞ் சின்னமு மிருந்து

     மனமு ழன்றகம் வெருவியோ டினரெனும் வாய்மை

     துனிவின் மாநபி கேட்டுநா யனைப்பல துதித்தார்

     நனியொ டுஞ்சய வாக்கிய மிடந்தொறு நடந்த.

182

     (இ-ள்) இத்தன்மையான அரசர்கள் அங்கே இருபது நாளுஞ் சொச்சமு மிருந்து மனமானது சுழலப்பெற்று இதயத்தின்கண் அஞ்சி யோடினார்களென்று சொல்லும் வார்த்தையைத் துன்பமற்ற பெருமை பொருந்திய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன்