பக்கம் எண் :

சீறாப்புராணம்

1692


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) பெண்களும் அறிவினது சூழ்ச்சியையுடைய புத்திரர்களும் போக, மற்றப் புருடர்களைக் கொஞ்சமாக அழைத்து வரிசையாகவும், பக்குவமாகவும், பத்தஞ்சாகவுங் கொண்டு வந்து களிப்பைத் தருகின்ற நமது புறுக்கானுல் மஜீதென்னும் வேதத்திற்கு உடன்படும்படியாகச் சொல்லுங்கள்.

 

4666. நாட்டும் வேத நவிலு முறைப்படி

     வேட்டி டார்களை வெட்டிப் படுகுழிப்

     போட்டி டுமினெ னப்புகன் றாரெழில்

     காட்டு மாமறைக் காரணத் தூதரே.

45

      (இ-ள்) நிலையாக நிற்கச் செய்த அவ்வேதமானது கூறிய ஒழுங்குப் பிரகாரம் விரும்பாதவர்களை வெட்டி அந்தப் பெரிய கிடங்கில் போடுங்களென்று அழகைக் காட்டா நிற்கும் பெருமை பொருந்திய அந்தப் புறுக்கானுல் கரீமென்னும் வேதத்தினது காரணத்தைக் கொண்ட றசூலாகிய நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் சொன்னார்கள்.

 

4667. கூறக் கேட்டுளங் கொண்டு மகிழ்ந்தெழுந்

     தீறி லாதசு காபிக ளீண்டியே

     மாறு காட்டும் பனீகுறை லாக்களை

     மீறு மாவண வீதிகொண் டேகினார்.

46

     (இ-ள்) அவ்வாறு சொல்ல, அதை அளவற்ற அசுஹாபிமார்கள் கேள்வியுற்றுத் தங்கள் தங்க ளிதயத்தின்கண் கொண்டு சந்தோஷித்து எழும்பி ஒன்றுகூடி விரோதத்தைக் காட்டுகின்ற அந்தப் பனீக் குறைலா வென்பவர்களை ஓங்கா நிற்குங் கடைத்தெருவிற் கொண்டு போனார்கள்.

 

4668. மாய மும்படி றுங்கொலை வஞ்சமு

     மேய காபிரை நோக்கி யிறையவன்

     றூய வுண்மைச் சுருதி முறைப்படி

     நேய மாங்கலி மாநிகழ்த் தும்மென்றார்.

47

      (இ-ள்) அவ்வாறு போய்க் கபடமும் பொய்யுங் கொலைத் தொழிலைக் கொண்ட வஞ்சகமும் பொருந்திய அந்தப் பனீக்குறைலாக்களாகிய காபிர்களைப் பார்த்து யாவருக்குங் கடவுளான அல்லா ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவினது பரிசுத்தமான உண்மையையுடைய புறுக்கானுல் அலீமென்னும் வேத ஒழுங்கின் பிரகாரம் நன்மையாகிய கலிமாவைச் சொல்லுங்களென்று சொன்னார்கள்.