பக்கம் எண் :

சீறாப்புராணம்

1708


இரண்டாம் பாகம்
 

அவர்களது மாளிகையைப் பார்த்துப் போகின்றதான ஒப்பற்ற தூதருமில்லாமற் போகும் பாதையினது தடையுமில்லாமல் இனிமையோடும் போனார்கள்.

 

4700. கந்தரக் குடையுஞ் செய்ய கமலவாண் முகமு மிக்க

     சுந்தர விழியு நீண்டு துலங்கிய கரமும் வாசக்

     கொந்தலர் மரவ மாலை குலவிய புயமும் வாடாச்

     செந்தளி ரடியும் பொற்பார் செயிநபு நங்கை கண்டார்.

14

     (இ-ள்) அவ்வாறு போக, அவர்களது மேகக் கவிகையையும், செந்நிறத்தைக் கொண்ட தாமரை மலரை நிகர்த்த ஒளி பொருந்திய வதனத்தையும், மேலான அழகையுடைய கண்களையும், நீட்சியுற்று விளங்கிய கைகளையும், வாசனையைக் கொண்ட பூங்கொத்துக்களாற் செய்யப்பட்ட குங்கும மாலையானது குலாவிய தோள்களையும், வாடாத செந்நிறத்தையுடைய இளந்தளிரைப் போன்ற பாதங்களையும், அழகு நிறைந்த அந்தச் செயினபு றலியல்லாகு அன்ஹா வென்னும் மங்கையவர்கள் பார்த்தார்கள்.

 

4701. அரியவன் றூத ரான அகுமதின் வடிவை நீண்ட

     விருவிழி யார நோக்கி யிதயத்தின் மகிழ்ச்சி கூர்ந்து

     திருமலர் வதனங் கோட்டிச் செவ்விய நிறைபோர்த் தல்லா

     வொருவனை யெண்ணிக் கற்பி னொல்கியாங் கொருங்கு நின்றார்.

15

     (இ-ள்) அரியவனான அல்லா ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் றசூலாகிய அஹ்மதென்னுந் திருநாமத்தையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது வடிவத்தை அவ்வாறு அவர்கள் தங்களது நீட்சியைக் கொண்ட இருகண்களாலும் பொருந்தும் வண்ணம் பார்த்து மனதின்கண் சந்தோஷமானது அதிகரிக்கப் பெற்று அழகிய தாமரை மலரைப் போன்ற தங்களது முகத்தைச் சாய்த்து அழகிய நிறையால் மூடி அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவாகிய ஒருவனை இதயத்தின் கண் நினைத்துக் கற்பினாற் குழைந்து அங்கே ஒருபுறமாக நின்றார்கள்.

 

4702. தென்றிகழ் மயிலை நோக்கிச் செபுறயீல் கொண்டு வந்த

     நன்றிசேர் குறானா யத்தை நவின்றுமா ராயஞ் சொல்ல

     வன்றவர் கிருபை யாகி யகமகிழ்ந் திவரோ டென்று

     மொன்றிய மனமாய்க் கற்பி லுயர்ந்தவ ரென்ன வாழ்ந்தார்.

16