பக்கம் எண் :

சீறாப்புராணம்

1709


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு நிற்க, அழகு பிரகாசிக்கின்ற மயில் போல்பவர்களான அந்தச் செயினபு றலியல்லாகு அன்ஹா அவர்களை அவர்கள் பார்த்து ஜிபுரீ லலைகிஸ்ஸலாமவர்கள் கொண்டு வந்த நன்மை பொருந்திய புறுக்கானுல் அலீமென்னும் வேதவசனத்தைச் சொல்லிச் சோபனங் கூற, அன்றே அந்தச் செயினபு றலியல்லாகு அன்ஹா அவர்கள் கிருபையுடையவர்களாகி மனமானது மகிழ்ச்சி யடையப் பெற்று இந்நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களோடு எக்காலமும் பொருந்திய இதயத்தையுடையவர்களாய்க் கற்பினால் மேன்மைப்பட்டவர்களென்று சொல்லும் வண்ணம் வாழ்ந்தார்கள்.

 

4703. உற்றவத் தினத்தி லும்மு சுலையுமென் றுரைக்கு நங்கை

     பெற்றரு ளனசைக் கூவிப் பிரியமாய்த் தயிரு நெய்யும்

     பற்றுற வருந்து மீத்தம் பழமுமொன் றாகச் சேர்த்துக்

     குற்றமில் பாத்தி ரத்தில் வைத்திவை கூறு கின்றாள்.

17

     (இ-ள்) அவ்வாறு வாழ்வதற்குப் பொருந்திய அந்தத் தினத்தில், உம்முசுலைமு றலியல்லாகு அன்ஹாவென்று சொல்லுந் தையலானவர்கள் தாங்கள் பெற்றுத் தந்த அனசு றலியல்லாகு அன்கு அவர்களை விருப்பமாய்க் கூப்பிட்டுத் தயிரையும் நெய்யையும் அன்பானது மிகும் வண்ண முண்ணுகின்ற ஈத்தம்பழத்தையு மொன்றாகச் சேர்த்துக் களங்கமற்ற ஓர் பாத்திரத்தின் கண் வைத்து இந்தச் சமாச்சாரத்தைச் சொல்லுவார்கள்.

 

4704. மைந்தனீ செயின பில்லின் முகம்மது நபிமுன் வைத்து

     முந்தவென் சலாஞ்சொ லென்று மொழிந்தவன் றன்னை யேவக்

     கந்தமார் மரவ மாலை கமழ்புயத் தனசு சென்று

     சுந்தர நபியைக் கண்டு துலங்குபாத் திரத்தை வைத்தே.

18

     (இ-ள்) புதல்வரே! நீவிர் இதைக் கொண்டு சென்று செயினபு றலியல்லாகு அன்ஹா அவர்களது வீட்டில் நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது சந்நிதானத்தில் வைத்து முதலில் எனது சலாஞ் சொல்லுமென்று சொல்லி அவரை அனுப்ப, வாசனை நிறைந்த குங்குமப் புஷ்பத்தினாற் செய்யப்பட்ட மாலையானது பரிமளிக்கின்ற தோள்களையுடைய அந்த அனசு றலியல்லாகு அன்கு அவர்கள் போய், அழகிய அந்நபிகட் பெருமானாரவர்களைப் பார்த்து விளங்கிய அப்பாத்திரத்தை வைத்து.