பக்கம் எண் :

சீறாப்புராணம்

1718


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு போய்ச் சேர, அங்கிருந்த அழகிய சிறையாகிய தூவிகளையுடைய பட்சிகள் யாவு மொன்றாகச் சேர்ந்து தங்கள் வாய்களைத் திறந்து சத்திக்கின்ற ஓசையானது, முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மென்னும் நபிகட் பெருமானே! எங்களைத் தாயைப் போலும் வளர்த்த இந்தச் சோலைக்கு வந்து பொருந்திய துன்பத்தை யில்லாமலாக்கக் கருணை புரிவீர்களென்று சொல்லுவதை நிகரா நிற்கும்.

 

4725. அத்திரி யலைத்த கொம்பி னலர்களி னறவ மாந்த

     மொய்த்திருந் தெழுந்த தும்பி முரன்றெழுந் தயலிற் போதல்

     சித்தநல் குறவே நாளுஞ் செழுநிதிக் குவைக ணல்கும்

     வித்தகர் தளர வுள்ள மெலிந்தயா சகரைப் போலும்.

10

     (இ-ள்) அன்றியும், அந்த ஒட்டகையானது அலைத்த கொம்புகளில், புஷ்பங்களின் மதுவைக் குடிக்கும் வண்ணம் நெருங்கியிருந்து எழும்பிய வண்டுகள் சத்தித்துக் கொண்டு பறந்து பக்கத்திற் செல்லுதலானது, மனமானது விருப்பமுறும் வண்ணம் பிரதி தினமும் செழிய திரவியத்தின் குவையை ஈயா நிற்கும் அறிவுடையோர்கள் தளர்ச்சியடைய, அதனால் மெலிந்த இரப்போரை நிகரா நிற்கும்.

 

4726. தளிர்களிற் புனலும் போது தனிலுறு மதுவும் வாடை

     வளியலைத் திடவே யெங்கும் வார்ந்தெழுந் தொழுகுந் தோற்ற

     மளியினுக் கிருப்பா மையா வத்திரி யலைத்த தென்று

     துளிதுளி யாகக் கண்ணீர் சொரிந்துகா வழுதல் போலும்.

11

     (இ-ள்) அன்றியும், தளிர்களிலிருந்த நீரும் புஷ்பங்களிலிருந்த தேனும் வாடைக் காற்றானது அலைக்க, அதனால் எழுந்து எவ்விடத்தும் வார்ந்து சிந்துகின்ற தோற்றமானது, அன்பிற்கு இருப்பிடமாகிய நபிகட் பெருமானே! இவ் வொட்டகாமானது என்னை வருந்திற்றென்று சொல்லித் திவலை திவலையாகக் கண்ணீரைச் சிந்தி அந்தச் சோலையானது அழுவதை நிகரா நிற்கும்.

 

4727. சோகுசென் றலைப்ப மாழ்கித் துயருறும் பொழிலைக் கண்டு

     பாகுற விருந்தவ் வாவிப் பாங்கியா லலக்க ணெய்தி

     யேகுறாப் பயங்கொண் டேங்கி யிருஞ்சிறைக் குள்ளா யுள்ள

     மாகமுந் தெரியா வண்ண மடைபடக் கிடந்தா ளொத்த.

12

     (இ-ள்) அன்றியும், அவ் வொட்டகமானது போய் வருத்த, அதனால் மயங்கித் துன்பத்தையடைந்த சோலையைப் பார்த்து பக்கத்திற் பொருந்தும் வண்ண முறைந்த தடாகமானது பாங்கியி னலக்கணறிந்து தானும் அலக்கணெய்தி வெளிவராமல் அச்சங்கொண் டிரங்கிப் பெரிய காவலிடத்துள் ளடங்கித்