பக்கம் எண் :

சீறாப்புராணம்

1719


இரண்டாம் பாகம்
 

தன்னுள்ளமு முடலு முணர்விற் றோற்றாத வண்ண மடைத்துக் கொண் டிருந்தவளைப் போல, அலைதலுங் கொண்டு மறுபுறம் பெயராதாகி நீர்த் தன்மையினா லொலித்துப் புடை பெயராது கட்டுப்பட் டுள்ளடங்கி வானந் தெரியா வண்ணம் அவ்வொட்டகை பறித்தெறிந்த தழைகளைப் போர்த்துக் கிடந்தது.

 

4728. இவ்வண்ணஞ் சோலை யெல்லா மெய்திய வருத்தங் கண்டு

     மைவண்ணக் குடையா ரந்த மருமலர்த் துடவை புக்கிக்

     கைவண்ணங் காட்டிச் சோகைக் காத்தருள் செய்து பாரிற்

     செவ்வண்ணப் படுத்த வெண்ணிச் சிறப்புடன் வருக வென்றார்.

13

     (இ-ள்) இந்தப் பிரகாரம் அந்தச் சோலை முழுவதும் பொருந்திய துன்பத்தை அழகிய மேகக் குடையை யுடையவர்களான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் பார்த்து வாசனையைக் கொண்ட புஷ்பங்களையுடைய அந்தச் சோலையின்கண் நுழைந்து அந்த ஒட்டகத்தைக் கிருபை செய்து காப்பாற்றி இப்பூமியின்கண் செவ்வையாகக் குணப்படுத்த வேண்டுமென்று நினைத்துத் தங்களது கைச்சாடையைக் காட்டிச் சிறப்போடும் வரக் கடவாயென்று கூப்பிட்டார்கள்.

 

4729. பருப்பத நடக்கக் காலும் படைத்திரு கண்ணுங் கண்ணி

     னெருப்புமந் நெருப்புக் கொத்த நெஞ்சமு நெஞ்சில் வேறே

     விருப்பமும் விருப்ப மில்லா மேனியு மேனிக் கொவ்வாக்

     கருப்பிடித் திறையோன் வைத்த கழுத்துங்கொண் டெதிர்ந்த தன்றே.

14

     (இ-ள்) அவ்வாறு கூப்பிட, ஒரு மலையானது தனக்கு நடப்பதற்குப் பாதங்களும் படைத்து இருவிழிகளும் அவ்விழிகளில் அக்கினியும் அவ்வக்கினிக்குச் சரியான இதயமும் அவ்விதயத்தில் வேறு ஆசையும் விருப்பமற்ற வுடலும் அவ்வுடலுக்குப் பொருந்தாக் கருவா யாவருக்கும் இறைவனாக அல்லா ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவானவன் பிடித்து வைத்த கழுத்துங் கொண்டு எதிர்ந்து வந்தாற்போல அவ்வொட்டகமானது வந்தது.

 

4730. வந்தவர் வதனக் கஞ்ச மலரைக்கண் டுருகா நின்ற

      சிந்தனை யுருகிக் கண்ணீர் செனித்திட வழுது நீண்ட

      கந்தர மொடுக்கி முன்னங் காலினை மடக்கி வாலை

      விந்தையா யசைத்துப் பாத மிசைசுசூ திட்ட தன்றே.

15