இரண்டாம்
பாகம்
குறைஷிய்யா காத்திமுல்
அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா சல்லல்லாகு
அலைகி வசல்ல மவர்களை நோக்கி.
4733. அய்யனே
யடியேன் றன்னைக் கொண்டவாண் டவனுக் கன்பாய்ச்
செய்யுமூ ழியங்க ளோவா
தாண்டுநாற் பதுஞ்செய் தெய்த்து
மெய்யெலா மெலிந்து
காலின் விரைவற்று நெஞ்சு போகக்
கையற லடைந்து வீழுங்
காலமாய்த் தளர்ச்சி யுற்றேன்.
18
(இ-ள்)
குருவாகிய நபிகட் பெருமானே! அடியேனாகிய யான் என்னை
விலைக்கு வாங்கின எஜமானுக்குக் கிருபையோடுஞ்
செய்கின்ற பணிவிடைகள் நாற்பது வருடம் மாறாமற் செய்து
இளைத்து உடல் முழுவதும் வாடிப் பாதங்களினது வேகமுங் கெட்டு
நெஞ்சானது போகும் வண்ணஞ் செயலற்று வீழுகின்ற
காலமாகிச் சோர்த லடைந்தேன்.
4734. அவரது
குறித்தி டாம லடித்தடித் தென்னை மேனா
ளெவனகா லத்துத் தாங்கும்
பாரமே யேற்றித் தின்னக்
கவர்மரத் திலையும்
புல்லுங் கால்வயி றளித்துத் தண்ணீர்த்
தவனமுந் தீர்ந்தி டாமற்
றறுகண்மை செய்ய லுற்றார்.
19
(இ-ள்)
அந்த எஜமானானவர் அதைக் கருதாமல் என்னை மிகவும் அடித்து
முன்னை நாளாகிய எனது பிராயகாலத்திற் சுமக்குஞ்
சுமைகளையே என் மீது ஏற்றி எனக்கு உண்ணுவதற்குக்
கவர்களைக் கொண்ட விருட்சத்தினது இலைகளும் புல்லுங்
கால்வயிற்றிற்குக் கொடுத்துத் தண்ணீரின் தாகமுந்
தீராதபடிக் குரூரஞ் செய்ய ஆரம்பித்தார்.
4735. ஈதலா
லவர்க ளுள்ள மிரங்கிடா தென்னைக் கொன்று
மேதையை யருந்த வென்ன
வியந்தனர் வியந்து நின்ற
காதலை யறிந்து காலிற்
கட்டிய பிணிப்பை வீழ்த்திப்
பாதவச் சோலை புக்கிப்
படுமத முளங்கொண் டென்ன.
20
(இ-ள்)
இஃதன்றியும், அவர்கள் தங்கள் மனமானது இரங்காதபடி
என்னை வதைத்து எனது தசையைத் தின்ன வேண்டுமென்று வியந்து
சொன்னார்கள். அவ்வாறு வியந்து சொல்லி நின்ற
விருப்பத்தை யான் தெரிந்து எனது காலிற் பிணித்த கட்டை
வீழச் செய்து மரங்களையுடைய இச்சோலையின் கண் புகுந்து
இதயத்தின் கண் மிக்க மதத்தைக் கொண்டாற் போலும்.
4736. மண்டிநின்
றெதிரே யோடி வருமவர் தம்மை யெல்லாந்
திண்டிறல் செய்தி யானே
திரிந்தனன் றிரிந்த தெல்லாங்
கண்டித வுலக மீது கலகமுண்
டாகின் ஞாய
முண்டெனும் வார்த்தை
தன்னை யுளநினைத் தென்ற தன்றே.
21
|