இரண்டாம்
பாகம்
மழையழைப்பித்த படலம்
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய
விருத்தம்
4741. முனிவற
வலிமா நல்கு முலையுறு நறும்பான் மாந்திப்
பனிமதிக் கருணை செய்து
படவர வழைத்துப் பேசுந்
தனிமுதற் றூத ராறா
மாண்டினிற் றகைமை பெற்ற
வனைகழல் சகுபி மார்கள்
வழுத்திட விருக்கு நாளில்.
1
(இ-ள்)
கோபமற ஹலிமா அவர்கள் கொடுத்த முலையினிடத்துற்ற
நறிய பாலையுண்டு குளிர்ச்சியைத் தருகின்ற சந்திரனைப்
போலுங் கிருபை செய்து படத்தைக் கொண்ட சர்ப்பத்தை
வரவழைத்துப் பேசிய ஒப்பற்ற முதல்வனான அல்லா ஜல்ல
ஜலாலகுவத்த ஆலாவின் றசூலாகிய நமது நாயகம்
எம்மறைக்குந் தாயகம், நபிகட் பெருமானார் நபி
செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன்
காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்கள் ஹிஜிரி ஆறாவது வருடத்தில்,
அழகைப் பெற்ற அலங்கரித்த வீரக் கழலைத் தரித்த
அசுஹாபிமார்கள் புகழும் வண்ண மிருக்கின்ற நாளில்.
4742. கீர்த்திசேர்
வள்ளல் வெள்ளிக் கிழமையிற் குத்து பாவி
லார்த்தெழுந் தோதி
மின்ப ரதனிடை யிருக்கும் போதில்
கூர்த்தசீர் சகுபி
மாரிற் குரைகழல் சுலைக்கு வென்போர்
பார்த்திவர் தம்மைப்
பார்த்துப் பரவிநின் றினைய சொன்னார்.
2
(இ-ள்)
கீர்த்தியைப் பொருந்திய வள்ளலான அந்நாயகம் நபிகட்
பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா
காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள்
வெள்ளிக்கிழமையில் குத்துபாவில் மின்பரினிடத்து
எழும்பிச் சத்தித்துக் குத்துபாவை ஓதியிருக்கின்ற
சமயத்தில், அதிகரித்த சிறப்பையுடைய
அசுஹாபிமார்களில் முழங்கா நிற்கும் வீரக்கழலை யணிந்த
சுலைக்கு றலியல்லாகு அன்கு வென்று சொல்லப்பட்டவர்
அரசரான அந்நாயகம் நபிகட் பெருமானா ரவர்களைப்
பார்த்து வணங்கி நின்று இத்தன்மையான சமாச்சாரத்தைச்
சொல்லுவார்கள்.
|