பக்கம் எண் :

சீறாப்புராணம்

1726


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அன்றியும், பட்சிகள் பறக்காமற் காடுகளிற் போய்ச் சேரும். அந்தக் காடுகளிலும் மலிந்த தளிர்க ளில்லாமையைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுப் பெரியச் சிறகுகளை விரித்துத் தண்ணீரைத் தேடி ஓடிப் போய் ஆகாயத்தின் கண் தங்கிய நீர்த்திவலையு மில்லாமல் நாக்கும் வறழ்ந்து உடல்கள் வாடப் பெற்றன.

 

4747. மருதநன் னிலமும் பாலை வனமென வுலர்ந்து வாவி

     பெருகிய கூவ லோடை பிறங்குநீர் வறந்தி யாதும்

     பருகநன் னீரு மின்றிப் பசிமிகுத் தழகு குன்றி

     யரிவையர் கற்பு மின்றி யகலிட மெலிந்த தன்றே.

7

     (இ-ள்) அன்றியும், நன்மை பொருந்திய மருத நிலங்களும் பாலை நிலத்தைக் கொண்ட காட்டைப் போலுங் காய்ந்து குளங்களும் நீரானது பெருகப் பெற்ற கிணறுகளும் ஓடைகளும் ஒளிரா நிற்குஞ் சலமானது வற்றி ஏது மருந்துவதற்கும் நல்ல நீருமில்லாமற் பசியானது அதிகரித்து அழகு குறைந்து பெண்களது கற்புமில்லாமற் பரந்த இப்பூமியானது மெலிவடைந்தது.

 

எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

4748. ஊனற மெலிந்து புலால்பொதிந் திருந்த

          வுடலமு மென்புரு வாகி

     மேனிமி ரொளிபோய்க் கரங்கடா ளதைத்து

          மெலிந்திறந் தனர்சிலர் சிலபேர்

     கூனியுங் குறைந்துந் திருந்தடை கிழங்குங்

          கொணர்ந்தவித் துப்பறப் பிசைந்து

     கானினி லலைந்து திரிந்தனர் சாம

          காலமு மிகுந்தன வென்றே.

8

     (இ-ள்) அன்றியும், சில ஜனங்கள் ஊனானது அற்றுப் போகும் வண்ணம் வாடி மாமிசத்தால் மூடப்பட்டிருந்த சரீரமும் எலும்பினது வடிவமாகி அச் சரீரத்தின்கண் ணோங்கிய பிரகாசமு மகன்று கைகளையும் கால்களையு மதைத்துச் சோர்ந்து மாண்டார்கள். சில ஜனங்கள் கூனலடைந்துங் குறைதலடைந்துஞ் செவ்வையாகிய இலைகளையுங் கிழங்குகளையுங் கொண்டு வந்து அவித்து உப்பின்றிப் பிசைந்து அருந்திக் காட்டினிடத்து அலைந்து திரிந்தார்கள். பஞ்சகாலமும் அதிகரித்ததென்று.

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

4749. திருத்தமா யுரைப்பக் கேட்டுத் திருநபி யிரங்கிப் பாரில்

     வருத்தங்க ணீக்க வேண்டி மனத்தினிற் கிருபை மீறிப்

     பொருத்தரும் புறுக்கான் வேதப் பொருளினை யெவரு முள்ளத்

     திருத்தரு மொளியை யுன்னி துஆவிரந் திருகை யேந்தி.

9