பக்கம் எண் :

சீறாப்புராணம்

1728


இரண்டாம் பாகம்
 

வண்ணங் கருநிறத்தைக் கொண்ட மழையைப் பொழியா நிற்கும் மேகமானது கருவைத் தோற்றப் பெற்றது.

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

4752. ஆதியி னருளி னால்வந் தருள்செயு முகிலாம் பிள்ளைத்

     தீதறு திசையிற் றோன்றிச் செழுங்கிரி தவழ்ந்து விண்ணின்

     மீதுற நடந்து காலால் விரைந்துசென் றோடிக் கூடிக்

     காதல்சேர் நிலத்தை நாளுங் காத்திடச் செறிந்த தன்றே.

12

     (இ-ள்) யாவருக்கும் முதன்மையனான அல்லாஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் காருண்ணியத்தினால் தோற்றிக் கிருபை செய்கின்ற அந்த மேகமாகிய குழந்தை களங்கமற்ற திக்குகளி லுதித்துச் செழிய மலையின்மீது தவழ்ந்து ஆகாயத்தின் கண் பொருந்தும் வண்ணம் நடந்து கால்களினால் வேகமாய் ஓடிப் போய்க் கூடி அன்பு பொருந்திய இப்பூமியைப் பிரதி தினமுங் காப்பாற்றுவதற்கு நெருங்கிற்று.

 

எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

4753. அலையொடு தழுவிச் சூன்முதிர்ந் தெழுந்தே

          யழகுற விளங்குமை மாரி

     தலைமக வளிக்கத் தாய்மனைக் குற்ற

          தனையள்போற் றரைமிசை யடுத்துக்

     குலவிமெய் பதறிப் பயமிகுத் ததிர்ந்த

          குரலொடு மின்னிவாய் வெருவித்

     துலைவற வுறவாண் மகவளித் ததுபோற்

          சொரிந்தது குளிர்ந்ததந் நிலமே.

13

     (இ-ள்) அன்றியும், சமுத்திரத்தோடும் புணர்ந்து கருப்பமானது முற்றப் பெற்று எழும்பி அழகானது பொருந்தும் வண்ணம் பிரகாசித்த கரிய அந்த மேகமானது, தலைப்பிள்ளை பெறுவதற்குத் தாய் வீட்டிற்குச் சென்று புத்திரியைப் போலப் பூமியின் மீது நெருங்கி யுலாவி யுடலானது பதறப் பெற்று அச்ச மதிகரித்து ஒலித்த சத்தத்தோடும் பிரகாசித்து அயர்ச்சியால் வாய்குளறித் தொலைவறும்படிப் பொருந்த ஆண் குழந்தையைப் பெற்றது போல் நீரைப் பொழிந்தது. அதனால் அந்தப் பூமி முழுவதுங் குளிர்ச்சியடைந்தது.

 

4754. மின்னுட னிடியு முழக்கிடத் திகிரி

         மிசைதிரி கதிரவன் மறைந்து

     பின்னிட விரவும் பகலினு மிருளே

         பிறங்கிடக் கலங்குநீர் பரந்து