பக்கம் எண் :

சீறாப்புராணம்

174


முதற்பாகம்
 

402. சுற்றிய துணைவ ரோடுஞ் சொரிகதிர் முகம்ம தென்னு

    நற்றவ முடைய நம்பி வருவதை நோக்கி நாடிச்

    சிற்றிடை யலிமா வென்னுஞ் சேயிழை யெதிரிற் சென்று

    பொற்றொடிக் கரத்தி லேந்திக் கொறியுடன் மனையிற் புக்காள்.

12

     (இ-ள்) சிறிய இடையினையுடைய ஹலிமாவென்று சொல்லும் பெண்ணானவர்கள் சொரியா நிற்கும் பிரகாசத்தையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லம் என்னும் நல்ல தவத்தையுடைய ஆண்டகையவர்கள் ஆடுகள் மேய்த்துவிட்டு திரும்பி வருவதைப் பார்த்து நாட்டமுற்று முன்னிற்போய தங்களது பொன்னாலான வளையல்களையுடைய கைகளினால் எடுத்தேந்திக் கொண்டு ஆடுகளுடன் வீட்டின்கண் வந்து புகுந்தார்கள்.

 

403. மற்றுமிவ் வண்ணஞ் சின்னாண் முகம்மது மப்துல் லாவும்

    பற்றுவிட் டகலா ராடும் பலுகின தொன்று பத்தாய்க்

    குற்றமி லலிமா வென்னுங் கொடிமனை தயிர்பா னன்னெய்

    வற்றுறாப் பெருகிச் செல்வம் வளர்ந்தினி தோங்கிற் றன்றே.

13

     (இ-ள்) இந்த விதமாகப் பின்னுஞ் சிலநாள் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் அப்துல்லாவும் ஒருவர்க்கொருவர் அன்புவிட்டு அகலாதவர்களாய் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்கள். ஆடுகளும் ஒன்று பத்தாக அதிகரித்தன. குற்றமில்லாத ஹலிமாவென்று சொல்லும் கொடியானவர்களின் வீட்டில் நல்ல தயிர் பால் நெய்யாகிய இவைகள் குறையாது ஓங்கிச் செல்வமும் வளர்ச்சியுற்று இனிதாய்ப் பெருகிற்று.

 

     404. குறுமறி யாய ராருங் குரிசிலைச் சூழ்வ ரல்லாற்

        பிறிதொரு நெறியுஞ் செல்லார் பெய்பரற் கானி லாங்கோர்

        செறிபுனற் றடத்தி னீழற் சேர்ந்தொரு முகமாய்க் கூடி

        யிறையவன் றூதர் முன்சென் றேவல்செய் திருப்ப ரன்றே.

14

     (இ-ள்) குறிய ஆடுகளையுடைய இடைப்பிள்ளைகள் யாவர்களும் நபிமுஹம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைப் பிரதிதினமும் வளைந்து கொள்வார்களே யல்லாமல் வேறேயொரு பாதைகளிலும் போகமாட்டார்கள். அன்றியும், பரற்கற்கள் செறிந்த அக்கானகத்தில் நீர் நிறைந்த வொரு குளத்தினதுக் கரையின் கண்ணுள்ள நிழலில் யாவர்களும் சேர்ந்து ஒன்றாகத் திரண்டு அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் றசூலான நபிகணாயக மவர்களின் முன்னாற் போய் அவர்கள் ஏவும்